பள்ளிகளில் ஹிஜாப் அணிய கூடாது என்று அரசின் உத்தரவை எதிர்த்து தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் பள்ளிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து 6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றப்பிறகு அது விசாரிக்கப்படும் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. 


முன்னதாக ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியமில்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளனர்.  




தீர்ப்பின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, ஷிவமொகா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்த, கூட்டம் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தீர்ப்பு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்துத் தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இப்போதுதான் ஊடகங்கள் மூலம் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவது குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை அறிந்தேன். மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் ஹிஜாப் அத்தியாவசியம் அல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த கவலையை ஏற்படுத்தியது. 


உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். அதை நாம் (அரசு) அமல்படுத்தும்போது, எல்லோரும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒத்துழைத்து அமைதி காக்க வேண்டும். அதுதான் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானது.  நீதிமன்ற உத்தரவின்படி, மக்கள், அனைத்து சமுதாயத் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உத்தரவை ஏற்று மாணவர்களுக்கு கல்வி அளிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண