வட இந்தியாவில் கனமழை மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநிலத்தில் இடைவிடாத மழையைக் கருத்தில் கொண்டு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி புதன்கிழமை தனது கோரிக்கையை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.


இருப்பினும், சிலர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலான அபாயகரமான சாலைகளில் பயணித்து தான் வருகின்றனர். அது குறித்த பல வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. குறிப்பாக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சேதமடைந்த சாலையை உயிரைப் பணயம் வைத்து கடப்பவர்கள் பலரது வீடியோ வெளியாகியுள்ளது.






தொடரும் உயிரிழப்புகள்


“மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இமாச்சலப் பிரதேசத்திலும் சிக்கித் தவிக்கும் உத்தரகண்ட் மக்களுக்கு உதவ எங்கள் அரசாங்கம் பேரிடர் நிவாரண எண்களை வெளியிட்டுள்ளது,” என்று முதல்வர் தாமி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.


செய்தி நிறுவனமான ANI பகிர்ந்த வீடியோவில், மக்கள் மிகவும் சிரமத்துடன் நெடுஞ்சாலை வழியாக செல்ல முயற்சிப்பதைக் காணலாம். நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மீது பாறாங்கல் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்ததோடு, ஆறு பேர் காயமடைந்தனர். இதற்கிடையில், மாநிலத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோஹ் நதி பௌரி மாவட்டத்தில் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்: IND vs WI Test: அஸ்வின், ஜடேஜா சுழலில் மாயம்.. 150 ரன்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள்.. இந்தியா அபாரம்..!


இயல்பு வாழ்கை பாதிப்பு


கோஹ் நதி பௌரி மாவட்டத்தின் கோட்வார் பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. காரில் இருந்தவர்களில் 3 பேர், ஆற்றில் மூழ்கி இறந்த நிலையில், மேலும் இருவர் சரியான நேரத்தில் வாகனத்தில் இருந்து வெளியே வந்து தப்பித்ததாக போலீசார் தெரிவித்தனர். இடைவிடாத மழையைத் தொடர்ந்து நிலச்சரிவு காரணமாக மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன, இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.






மழை இன்னும் தொடரும்


செவ்வாய்கிழமை நிலவரப்படி, நிலச்சரிவு மற்றும் பாறைகள் சாலைகளில் விழுந்ததால், ஒன்பது பயணிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களிலும் மாநிலத்தில் கனமழை தொடரும் என்று கணித்துள்ளது. இதனால் அதிகாரிகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தயார் நிலையில் உள்ளனர். கங்கோத்ரி நெடுஞ்சாலையில் தராசு அருகே மற்றொரு பாறை விழுந்து, அதன் போக்குவரத்தை கடுமையாக பாதித்தது. இதனால் பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.


ANI பகிர்ந்த வீடியோவில் அது பதிவாகியுள்ளது. நீர் தேக்கத்தால் ஏற்பட்ட இதுபோன்ற மற்றொரு சம்பவத்தில், பயணிகள் பேருந்திலிருந்து குதித்து தப்பிப்பதற்காக பேருந்தின் கூரை மீதே ஏறியபோது, அது பக்கவாட்டில் சாய்ந்ததைக் காண முடிந்தது. ராம்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.