ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் பிப்ரவரி 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.


ராப் வெல்லம்:


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விவரித்தார். அதன்படி, ராப் என்ற வெல்லத்தின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.


ராப் வெல்லத்தை பொறுத்தவரையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மீதான ஜிஎஸ்டி விகிதம் 18% இல் இருந்து பூஜ்யம் அல்லது 5% ஆகக் குறைக்கப்பட்டது. அதாவது, லேபிளிடப்படாத ராப் வெல்லம் பூஜ்ய சதவிகிதமாகவும் முன்கூட்டியே தொகுக்கப்பட்டு லேபிளிடப்பட்ட ராப் வெல்லம்  5 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டது. 


இன்று முதல் அமல்:


இந்நிலையில், ராப் வெல்லம் மீதான வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதேபோல, பென்சில் ஷார்பனர்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பும் இன்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பென்சில் ஷார்பனர்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. 


பிப்ரவரி 18ஆம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், "மத்திய அரசின் நிதி ஆதாரங்களில் இருந்து ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிக்கப்படும். இந்த விடுவிப்பின் மூலம், ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம், 2017 இல் திட்டமிடப்பட்டுள்ளபடி, 5 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இழப்பீட்டு செஸ் நிலுவைத் தொகையை மத்திய அரசு அளிக்கும்.


இன்றைய நிலவரப்படி இழப்பீட்டு நிதியில் இந்தத் தொகை உண்மையில் இல்லை என்றாலும், இந்தத் தொகையை எங்களின் சொந்த ஆதாரங்களில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளோம். அதே தொகை எதிர்கால இழப்பீடு செஸ் வசூலில் இருந்து திரும்பப் பெறப்படும்.


ஜிஎஸ்டி இழப்பீட்டின் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை இன்று முதல் அளிக்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளோம். அதாவது, ஜூன் மாதத்திற்கான மொத்த நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.16,982 கோடி விடுவிக்கப்படும்" என்றார்.


மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடத்தப்படாததற்கு விளக்கம் அளித்தார்.


"மதுரைக்கு இத்தனை மாநில அமைச்சர்கள், மத்திய துறை செயலாளர்கள் ஆகியோர் வரும் சூழலில் முறையான விருந்தோம்பல் அளிக்க நேரம் இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை டெல்லியில் நடத்திவிட்டு அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என கேட்டேன். அதை ஏற்று கொண்டு டெல்லியில் நடத்தியுள்ளார்கள்" என பேசியிருந்தார்.


சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) ஒரு மறைமுக வரியாகும். இந்தியா முழுவதும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. 


இதனால், மாநில அரசுகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கி வந்தது.