உறுதியான நிலையில் ரயில் பயண டிக்கெட்டை ரத்து செய்தால் இனி சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும் என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


இது தொடர்பாக நிதித்துறை அமைச்சகத்தின் வரி ஆராய்ச்சி குழு வெளியிட்ட அறிவிப்பில், முதல் வகுப்பு அல்லது ஏசி கோச் டிக்கெட்டுக்கான ரத்து கட்டணத்திற்கு இனி, 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். டிக்கெட்டுக்கு வதிக்கப்படும் வரி சதவிகிதத்தை ரத்து கட்டணத்திற்கும் விதித்துள்ளது.


ஆகஸ்ட் 3 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், "டிக்கெட்டுகளின் முன்பதிவு ஒரு ‘ஒப்பந்தம்’ ஆகும். இதன் கீழ் சேவை வழங்குநர் (IRCTC/இந்திய ரயில்வே) வாடிக்கையாளருக்கு சேவைகளை வழங்குவதாக உறுதியளிக்கிறது. பயணிகளால் ஒப்பந்தத்தை மீறும் போது, ​​சேவை வழங்குநருக்கு ஒரு சிறிய தொகையுடன் இழப்பீடு வழங்கப்படும். ரத்து கட்டணமாக வசூலிக்கப்படும். 


ரத்துசெய்தல் கட்டணம் ஒரு கட்டணமாக இருப்பதால், இது ஜிஎஸ்டி வரியை ஈர்க்கும்" என்று கூறப்பட்டுள்ளது. விமானப் பயணம் மற்றும் ஹோட்டல் தங்குமிடங்களை ரத்து செய்வதற்கும் இதே விதி பொருந்தும். முதன்மை சேவைக்கு வதிக்கப்படும் அதே ஜிஎஸ்டி விகிதமே ரத்து கட்டணத்திற்கும் விதிக்கப்படும்.


ரயிலின் குறிப்பிட்ட வகுப்பைப் பொறுத்தே, சரக்கு மற்றும் சேவை வரியின் விகிதமும் அமையும். இது, அந்த வகுப்பிற்கான இருக்கைகள்/பெர்த்களை முன்பதிவு செய்யும் போதும் பொருந்தும்.


உதாரணமாக, முதல் வகுப்பு அல்லது ஏசி பெட்டிகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5 சதவீதமாக இருந்தால், இந்த வகை வகுப்புகளுக்கான ரத்து கட்டணம் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.240 ஆகும். இங்கு, முதல் வகுப்பு/ஏசி பெட்டிகளுக்கு மொத்த ரத்துச் செலவு ரூ. 252 (ரூ. 240 + ரூ. 12 வரி) ஆகும். இருப்பினும், இரண்டாவது ஸ்லீப்பர் வகுப்பு உட்பட மற்ற வகைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதில்லை.


ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரம் அல்லது அதற்கு பிறகு டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட்டை ரத்து செய்ய, இந்திய ரயில்வே ரூ.240 வசூலிக்கிறது. ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்யப்பட்டால், டிக்கெட் தொகையில் 25 சதவீதம் ரத்து கட்டணமாக வசூலிக்கப்படும்.


சமீபத்தில், ஜூன் மாத இறுதியில் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி  திருத்தம் மற்றும் விலக்கு குறித்த அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையை ஏற்க முடிவு செய்யப்பட்டது. தயிர், லஸ்ஸி மற்றும் மோர் பால் உள்ளிட்ட முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட சில்லறை பேக்குகள் ஜூலை 18 முதல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட்டன.