திருமணங்களில் வரதட்சணை கொடுமைகள் நடப்பது இந்தியாவில் இன்னும் தீராத ஒரு பிரச்னையாக தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது இந்த பிரச்னைகள் காரணமாக சில பெண்கள் உயிரிழந்தும் வருகின்றனர். அதற்கு சற்று மாறாக வரதட்சணை கேட்ட நபரை மணமகள் குடும்பத்தினர் தாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது எங்கே? 


உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள சஹிபாபாத் பகுதியில் நேற்று இரவு ஒரு திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்தில் திடீரென மணமகனை மக்கள் அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அப்படி அவரை அடிக்க காரணம் என்ன?


காசியாபாத் பகுதிக்கு அருகே ஆக்ராவைச் சேர்ந்த முஜாமில் என்பவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நேற்று இரவு திருமணம் நடைபெற இருந்தது. இந்தச் சூழலில் திருமணம் நடைபெற வேண்டும் என்றால் அதற்கு மணமகள் குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாயை வரதட்சணையாக தர வேண்டும் என்று மணமகன் கூறியுள்ளார். இதன்காரணமாக மணமகள் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 






அப்போது அவர்களுக்கு திருமணத்திற்கு முன்பாக முஜாமில் ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. அத்துடன் அவருடைய திருமணம் தொடர்பாக படங்களும் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து மணமகள் குடும்பத்தினர் முஜாமிலை அடித்து உதைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


ஏற்கெனவே இரண்டு திருமணம் செய்து கொண்டு தற்போது மூன்றாவது திருமணத்திற்கு முஜாமில் தயாராகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மணமகள் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்களின் புகாரை ஏற்று காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் காசியாபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



மேலும் படிக்க: குட்டிகுரங்கை கொன்ற நாய்கள்.. பழிவாங்குவதற்காக சுமார் 250 நாய்க்குட்டிகளை கொன்ற குரங்குகள்.. என்ன நடக்கிறது பீட் மாவட்டத்தில்?