கோவாவில் உள்ள லைராய் தேவி கோயிலில், திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஏராளமானோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்
கோவாவின் வட பகுதியில் உள்ள ஷிர்காவ் கிராமத்தில், லைராய் தேவி கோயிலில், பிரசித்தி பெற்ற ஜாத்ரா எனும் திருவிழா நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆளில்லா ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியும் நடைபெற்றது. இந்நிலையில், நள்ளிரவில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், . யாத்திரை சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாப பலி
ஏராளமான பக்தர்கள் ஒரு சரிவான பாதையில் சென்றுகொண்டிருந்த போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள், கோவா மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
முதலமைச்சர் நலம் விசாரிப்பு.. பிரதமர் இரங்கல்
கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நேரில் சென்று பார்வையிட்டு, நலம் விசாரித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். அதோடு, பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி தன்னிடம் பேசியதாகவும், தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று கூறியதாகவும் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஷிர்காவ் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது கவலை அளிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.