கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது ஆறு வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி பிச்சோலிமிலிருந்து ராஜேஷ் துல்ஷிதாஸ் பட்னேகர், கலங்குட்டிலிருந்து ஜோசப் ராபர்ட் செக்வேரியா, செயின்ட் க்ரூஸைச் சேர்ந்த அந்தோனியோ பெர்னாண்டஸ், கம்பர்ஜுவாவிலிருந்து ஜனிதா பாண்டுராங் மட்கைகர், கோர்டலிமிலிருந்து நாராயண் ஜி நாயக் மற்றும் கர்டோரிமிலிருந்து அந்தோனி பார்போசா. தற்போதைய கோவா சட்டப் பேரவையின் பதவிக்காலம் மார்ச் 15ம் தேதியுடன் முடிவடைவதால், கோவா சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது.





அதாவது 2022ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்டமாக கோவா தேர்தல் நடைபெறும். கோவாவில் வாக்குப்பதிவு  பிப்ரவரி 14, 2022ல் நடைபெற உள்ளது. கோவா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10, 2022 அன்று நடைபெற உள்ளது.


2017ல் நடந்த கோவா சட்டப்பேரவை தேர்தலில் 17 எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையில் வெற்றிபெற்றது இருந்தாலும் சிறிய கட்சிகள் மற்றும் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ஆதரவுடன் அங்கே பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக,


கோவா மாநிலத்துக்கு வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி கோவா மாநிலம் நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் 3 எம்எல்ஏ.,க்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் அமைச்சர்கள். ஆனால், பாலியல் வழக்கில் சிக்கி ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.


அதே போல், முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கருக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. 


அவருக்குப் பதிலாக காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த 10 எம்எல்ஏக்களில் ஒருவரான அதனாஸியோ பாபுஷ் மான்செரட்டாவுக்கு பனாஜி தொகுதியை ஒதுக்கியுள்ளது. தற்போது முதல்வராக உள்ள பிரமோத் சவந்த், சகாலி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உத்பல் பரிக்கருக்கு ஏன் பனாஜி இல்லை?


உத்பல் பரிக்கருக்கு பனாஜி தொகுதி ஒதுக்காதது குறித்து கோவா பாஜக மேலிட பொறுப்பாளர் தேவேந்திர ஃபட்நவிஸ் கூறும்போது, மனோகர் பரிக்கரின் குடும்பத்தினர் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நாங்கள் உத்பலுக்கு பனாஜிக்கு பதிலாக வேறு இரு தொகுதிகள் கொடுத்துள்ளோம். அவர் எதில் வேண்டுமானாலும் போடியிடலாம். அதில் அவர் ஒன்றை ஏற்கெனவே நிராகரித்துவிட்டார். இன்னொன்று குறித்து ஆலோசனை நடக்கிறது. அவர் அந்தத் தொகுதியை ஏற்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். பாஜகவுக்கு எப்போதுமே பாரிக்கர் குடும்பத்தினர் மீது அக்கறை உண்டு என்று தெரிவித்துள்ளார்.


உத்பல் பரிக்கருக்கு பனாஜி தொகுதி மறுக்கப்படுவது இது இரண்டாவது முறை. 2019ல் மனோகர் பரிக்கர் மறைவுக்குப் பின்னர் பனாஜி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டபோது உத்பல் சீட் கேட்டு மறுக்கப்பட்டது. அப்போது பரிக்கரின் நண்பர் சித்தார்த் குன்சாலினேக்கருக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் காங்கிரஸின் மான்சரேட்டாவிடம் தோல்வியுற்றார். 


கோவாவில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக 36 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இன்னும் 6 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும். இன்னும் இரு தினங்களில் இந்த அறிவிப்பு வெளியாகும் எனக் கருதப்படுகிறது. முதல் வேட்பாளர் பட்டியலில் மூன்று தொகுதிகள் பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகள் பட்டியலினத்தவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 11 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், 9 தொகுதிகள் கத்தோலிக்க வேட்பாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 


சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே அவருடைய வால்போய் தொகுதியிலேயே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மான்சரெட் தம்பதி:


பனாஜி தொகுதி எம் எல் ஏவான் மான்சரெட் மீது கடந்த2 016 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கும் உள்ளது. இந்நிலையில் அவரது மனைவி ஜெனிஃபர் மான்சரெட் வருவாய்த் துறை அமைச்சராக உள்ளார். அவரும் இந்தத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.