வரும் ஜுன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அதன்படி, வங்கிகள் தொடர்ந்து எரிவாயு சிலிண்டர் வரையில் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன.


புதிய மாற்றங்கள்:


ஜூன் மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், மற்ற மாதங்களைப் போலவே இந்த மாதமும் பல்வேறு புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவற்றில் சில பொதுவான மாற்றங்களாகவும், மற்றவை புதியதாகவும் இருக்கும். ஒரு சில புதிய மாற்றங்கள் பொதுமக்களின் செலவை குறைத்தாலும் , மற்றவை தினசரி வாழ்க்கை மற்றும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை பாதிக்கலாம். அவற்றின் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.



  • வங்கி விதிகளில் மாற்றம்:


வங்கிகளில் இருக்கும் கோரப்படாத டெபாசிட்களின் (unclaimed deposits) வாரிசுகளைக் கண்டறியும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் இந்த நடவடிக்கையின் மூலம், வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரப்படாமல் உள்ள டெபாசிட்டுகளின் உரிமையாளர்களைக் கண்டறிந்து உரிமை கோரல்களைத் தீர்க்க முயற்சிக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வங்கியின் முதல் 100 உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளை 100 நாட்களுக்குள் தீர்த்து வைப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.



  • மின்சார வாகனங்களின் விலை உயர்வு:


ஜூன் மாதத்தில் மின்சார இரு சக்கர வாகனத்தை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த தகவல் உங்களுக்கு அதிர்ச்சியை தரலாம். காரணம் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு வழங்கப்படும் மானியத் தொகையை ஒரு kWh -க்கு ரூ.10,000 ஆக அரசாங்கம் குறைத்துள்ளது.  முன்னதாக இந்த மானியத் தொகை ஒரு kWh -க்கு ரூ.15,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.  மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் மின்சார பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்கும் போது பொதுமக்களுக்கு 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக செலவாகக் கூடும்.



  • ITR இணையதளத்தில் மாற்றங்கள் இருக்கும்:


ஜுன் 7ம் தேதி புதிய ஐடிஆர் இணையதளம் தொடங்கப்படுகிறது. அதன்படி, www.incometaxgov.in eன்ற பெயரில் புதிய இணையதளம் அறிமுகபடுத்த உள்ளது. இதற்காக ஐடிஆர் இணையதளம் ஜூன் 1 முதல் 6 வரை இந்த இணையதளத்தை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் சேவையும் செயல்படாது.



  • சிலிண்டர் விலையில் மாற்றம்


ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கும். எரிவாயு நிறுவனங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 19 கிலோ வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்தன. இருப்பினும், மார்ச் மாதத்துக்குப் பிறகு, 14 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மார்ச் 2023 இல், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இப்போது இந்த விலை மாறுகிறதா அல்லது குறைகிறதா என்பது நாளை தான் தெரியவரும். சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜியின் விலையும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • EPFO விதிகள் மாறும்


ஜூன் 1-ம் தேதி முதல் EPFO ​​விதிகளில் புதிய மாற்றம் வருகிறது. அதன்படி, அனைத்து பயனாளர்களும் தங்கள் PF கணக்கை ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியம். ஜூன் 1-க்குள் உங்கள் ஆதாரை PF உடன் இணைக்கவில்லை என்றால், நீங்கள் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும். 




  • காசோலை செலுத்தும் முறையை பாங்க் ஆப் பரோடா மாற்றுகிறது


    பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா, ஜுன் 1 முதல் காசோலை பயன்பாட்டில் புதிய நடவடிக்கையை அமல்படுத்த உள்ளது. அதன்படி, ஒரு வாடிக்கையாளர் ரூ.2 லட்சத்திற்கு காசோலையை யாருக்கேனும் வழங்கினால், அதற்கான விவரங்களை பயனாளர் முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.