சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.  இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ101.53க்கும், டீசல் ரூ.97.26க்கும் விற்பனையானது.  பெட்ரோல் நேற்று 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ.97.59க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இன்று விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. இதனால், அதன் விலையும் தொடர்ந்து மெதுவாக உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழக அரசு தனக்குக் கிடைக்கும் வரியிலிருந்து 3 ரூபாய் குறைத்ததால்தான் 102 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இல்லையெனில் இன்றைய பெட்ரோல் விலை 105 ரூபாயாக இருக்கும். மத்திய அரசு கைகளில் விலை நிர்ணயம் இருந்தவரையில் கூட ஓரளவு விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், பெட்ரோல், டீசலை விநியோகிக்கும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் கைகளில் விலை நிர்ணய உரிமை சென்றதோ, அன்று முதலே சிக்கல்தான். இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பல்வேறு பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 



இது குறித்து பெட்ரோலிய துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி பேசுகையில், "இந்திய அரசாங்கம் இலவசமாக இத்தனை கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதால்தான் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதற்கு ஆகும் செலவிற்கு பெட்ரோல் டீசல் உயர்வு மூலம் கிடைக்கும் பணமே அரசிற்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக உள்ளது." என்று தடுப்பூசியை இலவசமாக தருவதை பெருமையாக கூறியதை பலரும் விமர்சித்து வருகின்றனர். பெட்ரோல் மூலமாக மக்களிடமே திரும்பவும் வாங்கிக்கொண்டால் அது எப்படி இலவசமாகும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை விட இமயமலை தண்ணீர் விலை அதிகம் என்று பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு வாதத்தையும் முன் வைத்தார். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண