Farooq Abdullah: ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி:

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்,  தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனருமான டாக்டர் பரூக் அப்துல்லா, புதன்கிழமை மாலை ஜம்முவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் நகரின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்ற ஒரு வழக்கறிஞரின் மகனின் திருமண விழாவில் அப்துல்லா பங்கேற்று இருந்தார். அப்போது விழாவிற்குப் பிறகு விருந்து மண்டபத்திலிருந்து வெளியே வந்த சிறிது நேரத்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர் சந்தேக நபரை நொடி நேரத்தில் மடக்கிப் பிடித்ததன் மூலம் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

துப்பாக்கிச் சூடு - வீடியோ வைரல்..

மத்திய அரசின் பாதுகாப்புப் பிரிவில் உள்ள அப்துல்லாவுடன் ஜம்மு-காஷ்மீர் துணை முதலமைச்சர் சுரீந்தர் சவுத்ரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சம்பவத்தின் போது, ​​பெல்லட் குண்டு தாக்கியதில் சவுத்ரிக்கு லேசான காயம் ஏற்பட்டது, உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் இருந்து அப்துல்லாவே எந்த காயமும் இல்லாமல் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோவின்படி, தனது சகாக்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் சூழ அப்துல்லா நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த கூட்டத்தில் ஒருவராக வந்த நபர், மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து, அப்துல்லாவின் தலைக்கு அருகே கொண்டு சென்று சுட முயன்றுள்ளார். நொடி நேரத்தில் அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர் இதனை உணர்ந்து, மர்ம நபரை தடுத்து நிறுத்தி கீழே தள்ளி சுற்றி வளைத்தனர். அப்போது துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டா கூரையை நோக்கி சென்றது. அப்துல்லா அங்கிருந்து தலையை குனிந்தபடி தப்பிச் சென்றார். 

காவல்துறை விசாரணை:

கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கமல் சிங் ஜம்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, சந்தேக நபர் அருகிலுள்ள புதர்களில் மறைந்திருந்ததாகவும், அப்துல்லா விருந்து மண்டபத்தை விட்டு வெளியேறும்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடப்பதற்கு முன்பு அப்துல்லா திருமண விழாவில் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்,  தாக்குதலைச் சுற்றியுள்ள அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்து வருகின்றனர். நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டதால், பாதுகாப்பு நிறுவனங்களும் சம்பவத்தை மறுபரிசீலனை செய்து வருகின்றன. மத்திய அரசின் பாதுகாப்பு பிரிவில் இருந்தும், ஆயுதமேந்திய ஒருவர் எப்படி எனது தந்தையை இவ்வளவு நெருக்கமாக அணுக முடிந்தது? என ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.