உலக அளவில் புகழ்பெற்ற கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக, பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் உள்ளனர். இந்நிலையில், ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாகக் கூறி, ராஜஸ்தானில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில், ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் பதியப்பட்ட வழக்கு
ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாகக் கூறி, ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் உட்பட அந்நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது பாரத்பூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
எஃப்ஐஆர் பதிவு
அந்த பெண் பதிந்த வழக்கையடுத்து, பாரத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் எஃப்ஐஆர்-ஐ பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு, இந்தியாவின் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த சட்டத்தின்படி, பிராண்ட் தூதர்கள் தவறான அல்லது குறைபாடு உள்ள பொருட்களை விளம்பரப்படுத்தினால், அவர்களும் இதில் பொறுப்பேற்க வேண்டும். அதன் அடிப்படையில் தான், ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் தூதர்களாக உள்ள ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.