இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாளை முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக கடந்த 28-ஆம் தேதி முதல் கோவின் தளத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரே நாளில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தக்கொள்ள பதிவட்செய்தனர். 


இந்நிலையில் தடுப்பூசி மையங்களை தெரிந்துகொள்ள ஃபேஸ்புக் தளம் புதிய சேவையை தனது ஆப்பில் வழங்கவுள்ளது. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட உள்ளது. அதன்படி ஃபேஸ்புக் மொபைல் செயலியில் 17 மொழிகளில் தடுப்பூசி மையங்களை தேடும் சேவை அறிமுகப்படுத்தவுள்ளது. தடுப்பூசி மையங்கள் மற்றும் அது செயல்படும் நேரங்கள் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கவுள்ளது. முன்னதாக இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஃபேஸ்புக் நிறுவனம் 74.05 கோடி ரூபாயை நிதியை வழங்கி இருந்தது. தற்போது மீண்டும் தடுப்பூசி மையங்கள் தொடர்பான சேவையை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.