கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள கோயிலுக்கு 11 அடி உயரம், 800 கிலோ எடையிலான பிரமாண்ட ரோபோட்டிக் யானை அர்பணிக்கப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கோயில்களில் ரோபோட்டிக் யானையை பயன்படுத்துவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோயிலுக்கு ரோபோட்டிக் யானை:


கேரளாவில் உள்ள பல்வேறு கோயில்களில் சுவாமிகளுக்கான சிறப்பு பூஜைகளை மேற்கொள்ளவும், விழாக்கால சேவைகளுக்காகவும் யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதற்கு மாற்றாக, இரிஞ்சலகுடா அருகே உள்ள கல்லேட்டம்குரா பகுதியில் உள்ள இரிஞ்சடபில்லி ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில், ரோபோட்டிக் யானை ஒன்று கோயில் சேவைகளுக்காக அர்பணிக்கப்பட உள்ளது. ”இரிஞ்சடபில்லி ராமன்” என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரோபோட்டிக் யானை, வரும் 26ம் தேதியன்று கோயில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.


ரோபோட்டிக் யானை வடிவமைப்பு:


அயர்ன் ஃப்ரேம் மற்றும் ரப்பர் கோட்டிங் கொண்டு 11 அடி உயரம் மற்றும் 800 கிலோ எடையிலான பிரமாண்ட ரோபோட்டிக் யானை வடிவமைக்கப்பட்டுள்ளது. இரிஞ்சடபில்லி குடும்பத்தினருக்கு சொந்தமான ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கு, பீட்டா அமைப்பின் சார்பில் இந்த ரோபோட்டிக் யானை தானமாக வழங்கப்படுகிறது. கோயில் நடவடிக்கைகளின்போது 4 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த யானையை உருவாக்க 5 லட்ச ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செயல்பாடு:


ரோபோட்டிக் யானையிம் தலை, கண்கள், வாய் மற்றும் காது ஆகியவை மின்சாரம் மூலம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட உறுப்புகள் எப்போதும் அசையும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த யானையை, முழுமையாக தயாரிக்க 2 மாதங்கள் ஆகியுள்ளது. யானையின் தும்பிக்கையை தவிர மற்ற உறுப்புகள் அனைத்தும் மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகின்றன. யானை மீது அமர்ந்துள்ள பாகன் சுவிட்ச் ஆன் செய்தால் மட்டும், தும்பிக்கையில் இருந்து தண்ணீர் தெளிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் அநாவசிய குரல்களை எழுப்பாது எனவும், எதிர்பாராத விபத்துகள் எதுவும் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.


”விலங்கின சித்திரவதை தவிர்க்கப்படும்”


உயிருடன் இருக்கும் யானைகளை பராமரித்து அணிவகுப்பதில் ஏற்படும் பல்வேறு ஆபத்துகள் மற்றும் செலவுகளை தவிர்க்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். உயிருள்ள யானைகளை சித்திரவதை செய்வதைத் தவிர்க்க விரும்புவதாகவும், இது மற்ற கோயில்களால் பின்பற்றப்படும் முன்னோடி முயற்சியாக இருக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். கலாபாபிஷேகத்திற்கு பிறகு இரிஞ்சாடப்பிள்ளி ராமன் எனப்படும் ரோபோட்டிக் யானை, வரும் 26ம் தேதி முதல் கோயில் சேவைகளில் பயன்படுத்தப்பட உள்ளது