தலைமைத்  தேர்தல் ஆணையம்( Election Commission of India (ECI)) இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட முடிவு செய்துள்ளது தொடர்பாக நடபெற்ற செயல்முறை விளக்க கூட்டத்தில், எதிர்கட்சிகள் இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், செயல்முறை விளக்கம் கூட்டமும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எட்டு தேசிய கட்சிகள் 57 மாநில கட்சிகள் பங்கேற்ற செயல்முறை விளக்கம் செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களை கருத்துக்களை தெரிவிக்க  பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசிய மாநாட்டுக் கட்சி,  திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா என பெரும்பாலான தேசிய, மாநிலக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை ( Remote Electronic Voting Machine) தயாரித்துள்ளதாகவும், இதன்  மூலம் 72 தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களின் தகவல்களை கையாள முடியும் என்றும் தெரிவித்துள்ளது. .


இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:


நவீன தொழில்நுட்ப யுகத்தில் புலம்பெயர்ந்தோர் இருந்த இடத்தில் இருந்தவாறு வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.  30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாதது கவலை அளிக்கும் விஷயம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.


வாக்களிக்கும் உரிமையை சரிவர பயன்படுத்துவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. நாட்டுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகள் இல்லாத நிலையில், இருக்கின்ற தரவுகளை வைத்து ஆய்வு செய்ததில், 85 சதவீத புலம் பெயர்ந்தோர் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு பணி மற்றும் இதர காரணங்களுக்காக சென்றிருப்பது தெரியவந்துள்ளது. 


உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் எம்-3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.  வாக்குப்பதிவுக்காக சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் தற்போது இருக்கும் இடங்களில் வாக்களிக்க இந்த நடைமுறை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.


தொலைதூரத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் இருந்து இந்த இயந்திரம் மூலம் வாக்களிக்க முடியும்.  அரசியல் கட்சிகளிடமிருந்து எழுத்து மூலமான கருத்துக்களை 31.01.2023-க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. தற்போது, அதன் அவகாசம் அடுத்த மாதம் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.