உளவுத் தகவல்களின் அடிப்படையில், துபாயில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணியின் சாமான்களை ஆய்வு செய்தபோது, 7.56 கிலோ எடையுள்ள போதைப்பவுடர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது பிடிபட்டது. 

Continues below advertisement


பெண் பயணியை மடக்கி பிடித்த அதிகாரிகள்:


எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.


போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக குறிப்பிட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) நேற்று துபாயிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த இந்தியப் பெண் பயணியை சோதனைக்கு உட்படுத்தியது.


திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு கடத்தல்:


பயணியின் சாமான்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, ஐந்து காலி கைப்பைகள் / பணப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த 5 பைகளின் உட்புற அடுக்குகளை பிரித்து பார்த்தபோது, 7.56 கிலோ எடையுள்ள 10 பாக்கெட் வெள்ளை நிற போதைப்பவுடர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு 75.6 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.


பிடிபட்ட அந்த நபர் போதைப்பொருள் மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டம், 1985-ன் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


கடந்தாண்டு, டிசம்பர் 15ஆம் தேதி, துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய விமான ஊழியர் மற்றும் பயணி ஒருவரை, சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது, தான் வைத்திருந்த தங்கத்தை விமான ஊழியரிடம் அளித்துள்ளதாக பயணி ஒப்புக்கொண்டார். 


 






பின்னர், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விமான ஊழியர் 1.7 கிலோ கிராம்  எடைகொண்ட தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்துவைத்து இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விமான ஊழியர், பயணி ஆகிய இருவரையும் கைதுசெய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.