சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதற்கட்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.


2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தாமதம் ஏன்? இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.


இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 


ஆனால், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தாமதமாகி வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக, நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக எதிரக்கட்சிகள் புகார் எழுப்பி வருகின்றன.


மத்திய அரசின் பதில் என்ன? இந்த நிலையில், மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் இதுதொடர்பாக இன்று கேள்வி எழுப்பினார். திட்டப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது? என்பது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.


கடந்த மூன்றாண்டுகளில் நிதி ஒதுக்க ஏன் தாமதமானது? திட்டத்தை விரைந்து முடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். நிதி கேட்டு தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கைக்கு மத்திய அளித்த பதில் குறித்தும் கேள்வி எழுப்பினார்.


இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிமீ பாதை நீளம் கொண்ட சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்மொழிந்தது.


திட்டத்தின் சாத்தியக்கூறு மற்றும் வளங்கள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்தே இத்தகைய அதிக செலவு மிகுந்த திட்டங்களின் ஒப்புதல் அமையும். தற்போது, ​​சென்னை மெட்ரோ 2ம் கட்டத் திட்டம், மாநில அரசின்ஸ திட்டமாக செயல்படுத்தப்பட்டு, அதை செயல்படுத்துவதற்கான செலவை தற்போது தமிழக அரசே ஏற்றுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.