சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். நவம்பர் 17ஆம் தேதி கோவில் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 4,94,151 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று மாலை 7 மணி வரையில் மட்டும் 72,037 பேர் வந்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
ஆனால் இன்று காலை, கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது பக்தர் நெரிசல் குறைவாக இருந்தது. அதிக நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. கூட்ட நெரிசல் குறைந்ததற்கான முக்கிய காரணம், ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை தினசரியாக 5,000 ஆக மாற்றப்பட்டதே என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே, ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை நிலைமைக்கேற்ப அதிகரிக்கலாம் என கேரள உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. ஆனால் அந்த உத்தரவு தேவசம் வாரியத்திற்கு நேரத்தில் கிடைக்காததால் இன்று காலை நடைமுறைப்படுத்தப்படவில்லை.பக்தர்கள் 18 படிகளை நோக்கி செல்லும் பகுதியில் கடந்த சில நாட்களாக நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் KAP (Kerala Armed Police) மட்டுமே இருந்த நிலை. இதனால் கட்டுப்பாடுகள் தளர்ந்து பக்தர்கள் வருகை தாமதம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக IRB (India Reserve Battalion) படையும் இணைக்கப்பட்டதால், பக்தர்களின் அனுமதி நடைமுறை வேகமாகி, நீண்ட வரிசைகள் முற்றிலும் குறைந்துள்ளன.
இதனால் நேற்று மற்றும் இன்று காலை பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய முடிந்தது. கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றியதன் விளைவாக கூட்டநெரிசல் குறைந்தது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மண்டல, மகர விளக்கு காலத்தைக் கருத்தில் கொண்டு, சபரிமலையில் நடைபெற்று வரும் வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பக்தர் நெரிசல் கட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்களை நேரடியாக ஆய்வு செய்ய தேவசம் துறை அமைச்சர் வி.ஏன். வாசவன் இன்று சன்னிதானத்தில் வருகை தர உள்ளார். இதற்கான அனுமதியை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கியது. தேர்தல் நெறிமுறைகள் அமலில் உள்ளதால், ஊடக சந்திப்பு நடத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அமைச்சரின் வருகையையொட்டி சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் பகுதிகளில் காவல் ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ உதவி, க்யூ மேலாண்மை, ரோந்து பணிகள் ஆகியவை சீராக நடப்பதை அமைச்சரிடம் விளக்க உள்ளனர்.வார இறுதி தொடங்கியதால் இன்று மற்றும் நாளை பக்தர் வருகை அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். உயர்நீதிமன்றம் அனுமதித்திருக்கும் கூடுதல் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையும் இன்று மாலைக்குள் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. அதுவரை தினசரி 5,000 பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை இணைய பதிவு இடங்கள் ஏராளமாக நிரம்பி வருவதாலும், அடுத்த சில வாரங்களில் நெரிசல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. பாதுகாப்பு படைகள் முழுநேர கண்காணிப்பில் உள்ளன.