கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையால் (ED) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த மே மாதம், மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் 
வழங்கியது.


கெஜ்ரிவாலுக்கு தொடர் நெருக்கடி: இடைக்கால ஜாமின் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் சரண் அடைந்தார். இதற்கிடையே, ED விசாரித்து வந்த அதே மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.


இச்சூழலில், கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி, மூன்று நாள் சிபிஐ காவலுக்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஜூலை 12ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தனது கைதுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.


இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம்: சிபிஐ விளக்கத்திற்கு பிறகு ஏதேனும் சொல்ல வேண்டுமானால் விளக்கம் அளித்த இரண்டு நாள்களுக்குள் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து வழக்கின் விசாரணை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


"விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைப்பதில்லை. மழுப்பலான பதில்களையே அளிக்கிறார்" என விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதிட்டது. 

 

"குற்றம் நடந்ததற்கான ஆதாரங்களை கெஜ்ரிவாலிடம் காட்டினோம். ​2021-22இன் புதிய கலால் கொள்கையின் கீழ் மொத்த விற்பனையாளர்களுக்கான லாப வரம்பை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவது குறித்து எந்த நியாயமான விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை.


இரண்டாவது கொரோனா அலை உச்சத்தில் இருந்தபோது, ​​தெற்கு குழுமத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் டெல்லியில் முகாமிட்டு கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான விஜய் நாயரை சந்தித்துள்ளனர். இதையடுத்து, ​​ஒரே நாளில் கலால் கொள்கை அவசரமாக திருத்தப்பட்டது அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. ஏன் இப்படி செய்யப்பட்டது என்பதையும் அவரால் விளக்க முடியவில்லை" என சிபிஐ தரப்பு விசாரணை நீதிமன்றத்தில் வாதிட்டது.