டெல்லியில் உள்ள தெருக்களிலும் சாலைகளிலும் டெல்லி முதலமைச்சர் அதிஷியும் அமைச்சர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.


வரும் தீபாவளிக்குள் குண்டு, குழி இல்லாத சாலைகளை உருவாக்க டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெல்லி முதலமைச்சர் அதிஷியும் சக அமைச்சர்களும் களத்தில் நேரடியாக களமிறங்கியுள்ளனர்.


களத்தில் இறங்கிய அதிஷி அண்ட் டீம்: டெல்லியின் சாலைகளையும் தெருக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் அதிஷி வெளிட்ட பதிவில், "டெல்லியில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை சாலைகளையும் குண்டும் குழியும் இல்லாமல் ஆக்கும் வகையில், டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் இன்று காலை 6 மணி முதல் சாலைகளை ஆய்வு செய்து வருகிறது.


அந்த வகையில், என்எஸ்ஐசி ஓக்லா, மோடி மில் மேம்பாலம், சிராக் டெல்லி, துக்ளகாபாத் விரிவாக்கம், மதுரா சாலை, ஆஷ்ரம் சௌக் மற்றும் அண்டர்பாஸ் சாலைகளை ஆய்வு செய்தேன். இச்சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.


குண்டும் குழியுமாக சாலைகள்: ஆய்வின் போது, ​​சாலை வசதிகளை மக்கள் பெறுவதற்கு தேவையான அனைத்து சீரமைப்பு பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ் தீபாவளிக்குள் அனைத்து டெல்லிவாசிகளும் குழியில்லாத சாலைகளைப் பெறுவதை உறுதிசெய்வது எங்கள் நோக்கம்" என குறிப்பிட்டுள்ளார்.


டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதியில் ஆய்வு செய்தனர். "டெல்லியில் நிறைய மழை பெய்துள்ளது. சில இடங்களில் முழு சாலையும் நன்றாக இருக்கின்றன. ஆனால், தண்ணீர் தேங்குவதால் 50 மீ நீளம் சேதமடைந்துள்ளது.


 






நாங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தோம். நாங்கள் தெருவில் இறங்க வேண்டும் என்று அவர் எங்களிடம் கூறினார். அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்" என சவுரப் பரத்வாஜ் கூறினார்.