Delhi Air Pollution: தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 


உச்சம் தொட்ட காற்று மாசு:


டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும். பொதுவாக காற்றின் தரத்தை அளக்கும் அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது.


ஆனால் டெல்லியில் தற்போது 488ஆக காற்று மாசு பதிவாகி உள்ளது. குறிப்பாக டெல்லியில் லோதி சாலை, ஆர்கே புரம், ஐஜிஐ ஏர்போர்ட், நியூ மோதி பாக் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசனமான அளவில் பதிவாகி உள்ளது. அதாவது, ஆர்கே புரம் (466), ஐடிஓ (402), பட்பர்கஞ்ச் (471), மற்றும் நியூ மோதி பாக் 488ஆக பதிவாகி இருக்கிறது.  உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான காற்றின் மாசு அளவை விட சுமார் 10 மடங்கு அதிகமாக உள்ளது.


காற்றின் வேகம் குறைவாக இருப்பதாலும், மழை இல்லாததாலும் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதாலும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.  காற்று மாசு காரணமாக கண் எரிச்சல், மூச்சு திணறல் என பல்வேறு பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


வாகனங்களுக்கு கட்டுப்பாடு:


இதனால் மருத்துவமனையை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், காற்று மாசு அதிகரித்து வருவது குறித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பின் அமைச்சர் கோபால் ராய் சில கட்டுப்பாடுகளையும் வெளியிட்டார். அதன்படி, காற்று மாசு காரணமாக நவம்பர் 11ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும். 10,12ஆம் வகுப்புகளுக்கு தவிற பிற வகுப்புகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல 6 முதல் 12ஆம் வரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவித்தார். கட்டிடப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 


மேலும், டெல்லியில் நவம்பர் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வாகனங்களில் ஒற்றை  இலக்கு-இரட்டை இலக்கு முறை அமல்படுத்தப்படும். ஒற்றைப்படை எண்களில் (1,3,5,7, 9) ஆகிய எண்களில் முடிவடையும் வாகனங்கள் ஒற்றை தேதிகளில் சாலைகளில் வாகனங்களை இயக்க வேண்டும். அதே சமயம் இரட்டை இலக்கங்களில் (2,4,6,8) ஆகிய எண்களில்  முடிவடையும் வாகனங்கள் இரட்டை தேதிகளில் வாகனங்களை இயக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஏற்கனவே கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய  தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.