சமீபத்தில், டெல்லியில் 20 வயது இளம்பெண் கொடூர விபத்தில் சிக்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. பாதிக்கப்பட்ட பெண் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது காரை மோதியதில் அவர் வாகனத்தின் கீழ் சிக்கி கொண்டார்.


கிட்டத்தட்ட 13 கிமீ தூரத்திற்கு அவர் இழுத்து செல்லப்பட்டு நிர்வாண நிலையில் உடலில் பல காயங்களுடன் அந்த பெண்ணின் உடல் பின்னர், கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.


இந்நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் தலைநகர் டெல்லியில் மீண்டும் நிகழ்ந்துள்ளது. நேற்று, கேசவ் புரத்தில் காரை ஓட்டி சென்ற நபர் அந்த பகுதி வழியாக சென்ற பைக்கின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.


கார் மீது பைக் இடித்த வேகத்தில் பைக்கை ஓட்டியவர் காரின் கூரையில் மேல் விழுந்ததாகவும் பின்னர் கீழே விழுந்து காரின் அடியில் சிக்கி கொண்ட நிலையில் கிட்டத்தட்ட 350 மீட்டர் தூரத்திற்கு அவர் அப்படியே இழுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


பைக்கின் பின் சீட்டில் உட்கார்ந்து சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரு மாத காலத்திற்குள் ஒரே மாதிரியான இருவேறு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கேசவ் புர காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பைக்கில் சென்றவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது, பைக்கை ஓட்டி கொண்டு சென்று விபத்தில் சிக்கியவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதேபோன்று, டெல்லி கஞ்சவாலாவில் இளம்பெண் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது காரை மோதி விபத்துக்கு உள்ளாக்கியதாக 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.


டெல்லி சுல்தான்புரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் தொடங்கிய சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. காரில் மோதி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் இளம்பெண் அஞ்சலி (20) உயிரிழந்தார். அவரது ஸ்கூட்டியில் மோதிய பிறகு, கார் 10-12 கிமீ தூரம் சென்றது, காரின் அடிப்பகுதியில் அவரது கைகால்கள் சிக்கிக்கொண்டன.






அந்தப் பெண்ணின் தாயார் ரேகா, தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என குற்றம்சாட்டினார். "அவளுடைய ஆடைகளை முழுவதுமாக கிழிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அவர்கள் அவளைக் கண்டுபிடிக்கும் போது அவளது உடல் முழுவதும் நிர்வாணமாக இருந்தது. எனக்கு முழு விசாரணையும் நீதியும் வேண்டும்," என்று அவர் கூறினார்.