மிக்ஜாம் புயல் சென்னையைக் கடந்து ஆந்திராவின் வடக்கு பகுதியில்  தனது கோரதாண்டவத்தை நடத்தி வருகின்றது. இந்நிலையில் ஆந்திரா விசாகப்பட்டின கடல் பகுதியில் அடிக்கும் ஒவ்வொரு அலைக்கும் லட்சக்கணக்கான மீன்கள் கரைக்கு உயிருடன் ஒதுங்கி வருகின்றது. இது மட்டும் இல்லாமல் மீன்களை அள்ளிச் செல்ல மக்கள் பைகளுடன் கடலோரப் பகுதியில் குவிந்து வருகின்றனர். 


மிக்ஜாம் புயல் காரணமாக கடலில் இருந்து மீன்கள் லட்சக்கணக்கில் வெளியே தள்ளப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மிக்ஜாம் புயல் காரணமாக ஆந்திராவின் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. 



ரெட் அலார்ட்


ஆந்திராவில் உள்ள பாபட்லா, பிரகாசம், பல்நாடு, குண்டூர், கிருஷ்ணா, என்டிஆர், பிஏ, ஏலூர், கோனசீமா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 


மிக்ஜாம் புயலில் கோரதாண்டவத்தால் ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டத்தில் 25.1 ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.  யாடமாரி, கார்வேடிநகரம், புலிச்சேர்லா, பலமனேரு, ஸ்ரீகாளஹஸ்தி, நாகலாபுரம், சத்தியவேடு, திருப்பதி போன்ற பகுதிகளில் வேளாண் பயிர்களின் சேதம் என்பது அதிகப்படியாக ஏற்பட்டுள்ளது என வேளாண் துறையினர் மதிப்பிட்டுள்ளனர். 


சித்தூர், குடிபாலா, பலமனேரு, பெனுமுரு போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் நேரத்திற்கு நேரம் அதிகமாகி உள்ளது. பெனுமுரு மண்டல் மற்றும் கல்வகுண்ட்லா என்டிஆர் நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளது. மல்லேமடுகு ஏரியில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயலின் தாக்கத்தால், திருமலை ஐனா பாபவினாசனம், ஆகாசகங்கா, குமால்தாரா, குமாரதாரா, கோகர்பம் ஆகிய ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் முற்றிலும் நிரம்பின. சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வெள்ள நீர் வருவதால் பாபவினாசனம் அணை முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் நேற்று இரவு ஒரு கதவணை மட்டும் அதிகாரிகள் திறந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. காட் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.