கடந்த, 2025-2026ம் ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில், சபரிமலை ஐயப்பன் கோவில் பூசாரிகள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள், லஞ்சம் மற்றும் முறைகேடுகள் மூலம் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தங்கள் வங்கிக் கணக்குகள் வாயிலாக பரிமாற்றம் செய்துள்ளதாக கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலையில், தனலட்சுமி மற்றும் STADE BANK OF INDIA வங்கிக் கிளைகள் உள்ளன. ஐயப்பன் கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், ஐயப்பன் கோவில் தங்கம் கொள்ளை போன சம்பவத்துக்கு பின், சபரிமலையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் துாசி தட்டி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சபரிமலையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஊழியர்கள் மற்றும் பூசாரிகளும், உதவி பூசாரிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் வாயிலாக ஈட்டும் பணத்தை கையில் வைத்திருந்தால் லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்க வேண்டி இருக்கும் என்பதால், அவ்வப்போது பணத்தை வங்கி வழியாக பலரது கணக்குகளுக்கு அனுப்பி விடுகின்றனர். அந்த வகையில் கடந்த சீசனில் மட்டும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழியாக, 1,667 பரிவர்த்தனைகள் மூலம், 8.08 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. தனலட்சுமி வங்கியில், 942 பரிமாற்றங்கள் மூலம், 11.45 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. மேல் சாந்தி மற்றும் பூசாரிகள், தினக்கூலி பணியாளர்கள், குத்தகைதாரர்கள் என 18 கணக்குகளில் இந்த பரிமாற்றம் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் சிலர் நெய் விற்பனை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தபால் நிலையம் மூலம் 14.08 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. பக்தர்களின் தரிசனத்துக்கு உதவி செய்து பணம் வாங்குவது பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் தினக் கூலி அடிப்படையில் இங்கு வேலைக்கு வந்துவிட்டு லாட்டரி விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது. சபரிமலையில் தேவைக்கு அதிகமாக தினக்கூலி பணியாளர்களை நியமிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தினக்கூலி பணியாளர்கள் நியமனம் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிமன்றம் நியமித்துள்ள தனி அதிகாரி இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
