கொரோனா நோயாளி என்ற காரணத்தால் வீட்டிற்குள் நுழைய வீட்டின் உரிமையாளர் அனுமதிக்காத காரணத்தால் கணவன், குழந்தையோடு இரண்டு நாட்கள் டாக்ஸியில் தங்கியுள்ளார் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பெண்மணி ஒருவர்.


ஹிமாச்சல் பிரதேசத்தின் மாந்தி மாவட்டத்தை சேர்ந்த பெண்மணிக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை அறிந்த வீட்டின் உரிமையாளர், வீட்டிற்கு உள்ளே அந்த பெண்மணியை அனுமதிக்காத காரணத்தால், 2 வயது குழந்தை மற்றும் கணவருடன் இரவு, பகலாக இரண்டு நாட்கள் டாக்ஸியில் தங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 


அந்த பெண்மணியின் கணவர் பரஸ்ராம் ஒரு டாக்ஸி ஓட்டுனர். அவர் தனது நிலைமையை வீட்டின் உரிமையாளரிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் பரஸ்ராமை உள்ளே அனுமதிக்கவில்லை. அக்கம் பக்கத்து வீட்டாரும் உதவிக்கரம் நீட்டவில்லை. இதனால் இரண்டு நாட்கள் டாக்ஸியில் தங்கிய பிறகு பரஸ்ராமிற்கு காவல் துறையின் உதவி கிடைத்துள்ளது. மாவட்ட டிஎஸ்பி கீதாஞ்சலி தாகூர் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். வீட்டின் உரிமையாளருடன் அவர் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பிறகு பரஸ்ராம் குடும்பம் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடன் இரண்டு நாட்களுக்கு வீட்டுக்குத் தேவையான உணவு பொருட்களையும் டிஎஸ்பி கீதாஞ்சலி ஏற்பாடு செய்து தந்துள்ளார்.