மீண்டும் அதிகரித்த கொரோனா


கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பரவி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸின் உருமாறிய வைரஸ், அதாவது சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 


ஏற்கனவே கொரோனா முதல் அலை இரண்டாவது அலை என புரட்டி எடுத்ததைப் போலவே அடுத்த கொரோனா அலையாக, உருமாறிய கொரோனா பரவலும் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவின் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக இந்த உருமாறிய வைரஸ் தொற்றால், வயதில் முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். 


சீனாவைப் பொறுத்தவரை கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டால், அதனை கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு என குறிப்பிடாமல், நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என குறிப்பிடுகிறது. இதனால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை மிகக் குறைவாக காட்டப்படுகிறது. ஆனால், தகன மையங்களில் உடல்கள் நிரம்பி வழிவதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன. 


சீனாவில் மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்க காராணமே  ”ஜீரோ கோவிட்” என்ற நடைமுறையை சீன அரசு நடைமுறைப்படுத்தி மக்களை எந்தவிதமான கட்டுப்பாடுகள் இன்றியும், குறைந்த பட்சம் முகக்கவசம் அணியக் கூட அரசு அறிவுறுத்தாததுதான் காராணம் என கூறப்படுகிறது. 




227 பேருக்கு கொரோனா பாதிப்பு

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை 46 லட்சத்து 77 ஆயிரத்து 106-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 693-ஆக உள்ளது.  கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையானது 3,424-ஆக உள்ளது. நாட்டில் இதுவரை 220.05 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

பரிசோதனை கட்டாயம்

 

இந்நிலையில்,  சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து  வரும் பயணிகளுக்கு RT-PCR சோதனை கட்டாயமாக எடுக்க வேண்டும். இந்த நாடுகளில் இருந்து எந்த பயணிக்கும் அறிகுறி அல்லது கோவிட் 19 பாசிட்டிவ் கண்டறியப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.