இந்தாண்டு இறுதியில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலும் அடுத்தாண்டு ஏப்ரல் மே மாதங்களில் மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது பாஜக.


பாஜக தொடங்கப்பட்டபோது, மூன்று முக்கிய விவகாரங்கள் அக்கட்சியின் கொள்கை ரீதியான நோக்கங்களாக இருந்தன. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்குவது, அயோத்தி கோயிலை கட்டுவது, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது ஆகியவை கட்சியின் முக்கிய நோக்கங்களாக முன்னிறுத்தப்பட்டது.


பாஜகவின் கொள்கை ரீதியான விவகாரங்கள்:


கடந்த 2014ஆம் ஆண்டு முதல்முறையாக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த போதிலும், முக்கிய விவகாரங்களைக் கையில் எடுக்காத பாஜக, 2019 தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தவுடன் கொள்கை ரீதியான விவகாரங்களை கையில் எடுக்க தொடங்கியது.


மே மாதம் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, அதே ஆண்டு, ஆகஸ்ட் மாதம், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு நீக்கியது. இதை தொடர்ந்து, நவம்பர் மாதம், அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோயில் கட்டி கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


2020ஆம் ஆண்டு, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மதச்சார்பற்ற நாடாக விளங்கும் இந்தியாவில் மசூதியை இடித்து விட்டு கட்டப்பட உள்ள கோயிலுக்கு பிரதமரே அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், அயோத்தி ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பக்தர்களுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொது சிவில் சட்டம்:


இந்நிலையில், கடைசி விவகாரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக. இந்தாண்டின் இறுதியில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலும் அடுத்தாண்டு ஏப்ரல் மே மாதங்களில் மக்களவை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது பாஜக.


நேற்று, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது. எந்த அரசியல் கட்சிகள், தங்களின் சுய பலன்களுக்காக, இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு அவர்களை அழிக்க முற்படுகிறார்கள் என்பதை இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


என்ன சொல்ல வருகிறார் மோடி?


தற்போது எல்லாம், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இப்படிப்பட்டவர்கள் தூண்டப்படுவதைப் பார்க்கிறோம். நீங்கள் சொல்லுங்கள், ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு சட்டமும், இரண்டாவது உறுப்பினருக்கு மற்றொரு சட்டமும் இருந்தால், அந்த குடும்பம் செயல்பட முடியுமா? இவ்வாறான இரட்டை அமைப்புடன் நாட்டை நடத்த முடியுமா?" என்றார்.


இரண்டு வாரங்களுக்கு முன்புதான், மத அமைப்புகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் பொது சிவில் சட்டம் தொடர்பாக 22ஆவது சட்ட ஆணையம் ஆலோசனைகளை கேட்டிருந்தது. அதேபோல, அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றிருந்தபோது, அவரிடம் செய்தியாளர் ஒருவர் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். 


அதுமட்டும் இன்றி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்திய சிறுபான்மை உரிமைகள் குறித்து பேசியது பேசுபொருளானது. இந்த சூழ்நிலையில், இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு அழிக்க முற்படுவது யார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.