கொள்கை வகுப்பாளர்களுக்கும் குடிமக்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது, கோவிட்-19: தி ரேஸ் டு ஃபினிஷிங் லைன்' என்ற தலைப்பில் எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கி செப்டம்பர் மாதத்தில் உச்சம் தொடும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


கொரோனா இரண்டாம் அலை நோய் தொற்றுகள் பரவல் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் இரண்டாம் பாதியில் அதிகபட்சத்தை எட்டி மே இறுதி வரை நீடிக்கும் என்று முன்கூட்டியே எஸ்.பி.ஐயின் மற்றொரு ஆய்வறிக்கை கணித்திருந்தது.



ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் மூன்றாவது அலை 


அதைப்போலவே கடந்த மே மாதம் 7ஆம் தேதி இந்தியா கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை அடைந்தது. தற்போதய தரவுகளின் படி ஜூலை 2ஆவது வாரத்தில் இந்தியாவில் 10,000 க்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அதிகரிக்கலாம் எனவும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இருந்து இந்தியாவில் புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


தடுப்பூசி மட்டுமே மீட்பர்



எஸ்பிஐ ரிசர்ச் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தடுப்பூசி மட்டுமே மீட்பர் என்று கூறியது. இந்தியாவில் தற்போதைய கொரோனா பாதிப்பு என்பது கடந்த வாரத்திலிருந்து தற்போது வரை  45,000 என்ற அளவில் உள்ளது, இது பேரழிவு தரும் இரண்டாவது அலை "நாட்டில் இன்னும் முடிவடையவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. உலகளாவிய தரவுகளின் படி இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது பதிவான வழக்குகளை விட மூன்றாம் அலையின் போது 1.7 மடங்கு அதிகமாக இருக்கும் எனவும், ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த வழக்குகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினசரி 40 லட்சம் தடுப்பூசிகளை போட வேண்டும்


எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி நாள் ஒன்றுக்கு 40 லட்சம் தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும் எனவும், இந்தியாவில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 4.6% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் 20.8% பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்டநாடுகளுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிக குறைவு என்றும் எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


நடப்பு நிதியாண்டில் வங்கி வைப்பு தொகை குறைந்து விட்ட நிலையில் அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தில் வீட்டுக் கடன் தொகை மேலும் அதிகரிக்கும் என்றும்,  அதிக ஜிடிபியை கொண்ட மாநிலங்களில் அதிக உயிரிழப்பும், குறைவான ஜிடிபியை கொண்ட மாநிலங்களில் குறைந்த உயிரிழப்பும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துதல் குறைவு



இந்தியா ஒரு நாளைக்கு 40 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கத் தொடங்கி உள்ள நிலையில், ராஜஸ்தான், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், கேரளா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசிகளையும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  வழங்கியுள்ள நிலையில், கிராமப்புறங்களில் ஒட்டுமொத்த தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாகவே உள்ளது எனவும் தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரபிரதேசம், அசாம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறைந்த விகிதத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளன என்றும் இந்த மாநிலங்கள் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.