சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.


இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக வெளிநாட்டில் இருந்து இந்திய விமான நிலையங்களுக்கு வந்திறங்கிய 39 வெளிநாட்டவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதையடுத்து, நிலைமையை கண்காணிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல உள்ளார்.


மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதை அடுத்து வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதலின்படி, விமான நிலையங்களில் இதுவரை 6,000 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களில் தோராயமாக 2 சதவிகிதம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.


சீனாவில் மீண்டும் கொரோனா உச்சம் அடைவதற்கு நான்கு வகை கொரோனா வைரஸே காரணம். குறிப்பாக, BF.7 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 சதவிகிதத்தினர்  BF.7 வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடி கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.


அறிவியல் உலகின் தொடர் முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது கட்டுப்பாட்டில் வரவழைக்கப்பட்டது. கொரோனா எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 


இருந்தபோதிலும், பல மாதங்களாக சீனாவில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதை தொடர்ந்து, பொருளாதார தாக்கத்தின் காரணமாகவும் மக்கள் போராட்டத்தின் விளைவாகவும் பூஜ்ய கொரோனா கட்டுப்பாடுகள் அங்கு திரும்பபெறப்பட்டது. இதன் காரணமாகதான், அங்கு கொரோனா அதிகரித்ததாக கூறப்படுகிறது.


இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்தில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படுவதை இந்தியா கட்டாயமாக்கியுள்ளது.


நாடு முழுவதும் நேற்று சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. சுகாதார மையங்களில் போதுமான படுக்கைகள் இருக்கிறதா? நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா? ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா? உள்ளிட்ட விஷயங்கள் இந்த சுகாதார ஒத்திகையில் கவனத்தில் கொள்ளப்பட்டது.