சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.


மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.




இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 510 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 1.65 லட்சம், நேற்று 1.52 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 1.27 லட்சமாக குறைந்துள்ளது. 


இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரேநாளில் ஒரு  லட்சத்து  27 ஆயிரத்து 510 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 534இல் இருந்து 2 கோடியே 81 லட்சத்து 75 ஆயிரத்து 44-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 795 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 100-ல் இருந்து 3 லட்சத்து 31 ஆயிரத்து 895-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 287 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 92 ஆயிரத்து 342இல் இருந்து 2 கோடியே 59 லட்சத்து 47 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது.


 






கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 91.60 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.17 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18 லட்சத்து 95 ஆயிரத்து 520-ஆக குறைந்துள்ளது.  இதுவரை 21 கோடியே 60 லட்சத்து 46 ஆயிரத்து 638 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் 2.56 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!


பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.