தமிழ்நாட்டின் பல்வேறு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் சுற்றுலாவிற்காக குன்னூர், உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு வருவது வழக்கம்.


குன்னூர் பேருந்து விபத்து:


அந்த வகையில், நேற்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் நீலகிரிக்கு வந்ததால், போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேபோல, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 57 சுற்றுலா பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் சுற்றுலா பேருந்தில் நீலகிரிக்கு சுற்றுலாவிற்காக சென்றுள்ளனர். பின்னர், அப்பேருந்தில் தென்காசிக்கு திரும்பியுள்ளனர்.


அப்போது குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் நிதின் (15), தேவிகலா (36), முருகேசன் (65), முப்புடாதி (67), கெளசல்யா (29), இளங்கோ (64), செல்வன் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 


இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட 30 க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி:


இந்த நிலையில், குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில்,  "தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. 


அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருடன் நினைவை பகிர்ந்து கொள்கிறேன். விபத்தில் சிக்கியவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.






 


இந்த விபத்து குறித்து குன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து காரணமாக உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.