நடப்பு மக்களவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. இதனால், அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


ஒரே நாடு ஒரே தேர்தல்:


அதன் ஒரு பகுதியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கையில் எடுத்துள்ளது பாஜக. நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை மத்திய பாஜக அரசு அமைத்துள்ளது.


ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பரிந்துரைகளை வழங்க குழு அமைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பானை வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே, மத்திய ஊல் தடுப்பு அமைப்பின் முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி, நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என். கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி. காஷ்யப் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


ராகுல் காந்தி எதிர்ப்பு:


ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு இந்தியா (எதிர்க்கட்சிகள்) கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பேசியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "இந்தியா, அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம். இந்திய ஒன்றியம் மற்றும் அதன் மாநிலங்களின் மீது தாக்குதல் தொடுக்கும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என எக்ஸ் சமூக வலை தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 1, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என குறிப்பிடுகிறது. ஆனால், இந்திய ஒன்றியம் என குறிப்பிடுவதை பாஜக தலைவர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், இந்திய ஒன்றியம் என ராகுல் காந்தி குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.


முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் தற்போதுள்ள விதிகளை கருத்தில் கொண்டு, மக்களவை, மாநில சட்டப் பேரவைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கும்.


ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் வேறு ஏதேனும் சட்டம் ஆகியவற்றில் குறிப்பிட்ட திருத்தங்களை மேற்கொள்வது அவசியம். எனவே, மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை ஆராய்ந்து குழு பரிந்துரை வழங்கும்.