நீட் வினாத்தாள் கசிவு என கூறப்படுவதை கண்டித்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஏற்பாடு செய்திருந்த நாடாளுமன்றப் பேரணியை காவல்துறை ஒடுக்கி வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்தில் மாணவர்களுடன் இணைந்துள்ளன.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி
முன்னதாக, நேற்று டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் உள்ளிட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், லத்தியால் தாக்கியும் பேரணியை கட்டுப்படுத்த போலீசார் முயன்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
போராட்டத்தில் இணைந்த ராகுல்
இந்த சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த இளைஞர்கள், இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிவரும் இளைஞர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் எம்.பி-க்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து, ராகுல் காந்தி பேரணி நடத்தினார். அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லம் வரை பேரணியாக சென்ற காங்கிரஸார், இல்லத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுலுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி - கைது
இந்த போராட்டத்தின் போது, நீட் வினாத்தாள் மோசடி விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், அது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அங்கு வந்த டெல்லி காவல்துறையினர், ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராகுல் காந்தி வேண்டுகோள்
இதனிடையே, மாணவர்கள் மீதான தாக்குதல், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இதற்குப் பதிலளிக்காமலும், எந்த பொறுப்பையும் ஏற்காமலும், இந்த விவகாரத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு நீதி கோரி பிரதமர் இல்லத்தின் முன்பு நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நாட்டுப்பற்றுள்ள இந்தியர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், தற்போது ராகுல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
