டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதனை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வர்த்தக ரீதியிலான டீசல் ட்ரக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசப் பொருட்களைக் கொண்டு வரும் டீசல் ட்ரக்குகளுக்கு மட்டுமே டெல்லியில் நுழைய அனுமதி அளிக்கப்படும். மற்றபடி சிஎன்ஜியில் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதியளிக்கப்படும். நடுத்தர மற்றும் பெரிய வாகனங்கள் அனைத்தும் அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றி வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். இப்போதைக்கு BS-4 டீசல் வாகனங்கள் கூட டெல்லி மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.


அதேபோல் சுத்தமான எரிசக்தியில் இயங்காத அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அதேவேளையில் பால், பால் சார்ந்த பொருட்கள், மருந்துகள், மருத்துவப் பொருட்கள் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், சாலைகள், மின் பகிர்மான கட்டுமானங்கள், பைப்லைன் கட்டுமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய அரசு டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்களில் பணி புரிவோரில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணி புரிய அனுமதிக்குமாறு கோரியுள்ளது. பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் வாகனங்கள் ஆட், ஈவன் அடிப்படையில் இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று காலை நிலவரப்படி காற்று மாசு 400க்கும் அதிகமாக உள்ளது.


உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான காற்றின் மாசு அளவை விட சுமார் 10 மடங்கு அதிகமாக மாசடைந்துள்ளது டெல்லி நகரம். இதன்  PM 2.5 அளவு சுமார் 107.6 என அளவிடப்பட்டுள்ளது.  PM 2.5 என்பது நுரையீரலிலும், பிற உறுப்புகளிலும் காற்று மூலமாக நுழையும் சிறிய துகள்கள் ஆகும். இவை நச்சுத்தன்மை கொண்டவை. 


அதிகப்படியான காற்று மாசு காரணமாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படு. அதாவது கருவுற்று இருக்கும் பெண்கள் மாசு அடைந்த காற்றை சுவாசிக்கும் போது அவர்களுக்குள் வளரும் குழந்தையை அது நேரடியாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது. அதாவது அந்த குழந்தையின் மூளை வளர்ச்சியில் சில தடைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 


காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது: 


காற்றின் தரத்தை அளக்கும் அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது


உலகிலேயே காற்று மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது டெல்லி. உலகிலேயே அதிக மாசடைந்த இடமாக இந்தியாவின் கங்கை சமவெளி கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல் மேற்கு வங்கம் வரையிலான பகுதியில் வாழும் சுமார் 50 கோடி மக்கள் இதே மாசுபட்ட சூழலில் வாழ்ந்தால் சராசரியாக தங்கள் ஆயுளில் இருந்து சுமார் 7.6 ஆண்டுளை இழக்க நேரிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.


புகைபிடிக்கும் பழக்கம் மூலமாக 1.5 ஆண்டுகள் ஆயுள் குறையும் எனவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சுமார் 1.8 ஆண்டுகள் ஆயுள் குறையும் எனவும் கூறப்பட்டிருந்த நிலையில், இவற்றை விட ஆபத்தான ஒன்றாக மாறியிருக்கிறது காற்றுமாசு.  உலகிலேயே அதிக மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. முதலிடத்தை வங்காளதேசம் பிடித்துள்ளது.