எந்திரன் சிட்டி ரோபா அப்டேட் செய்யப்பட்டது போல உச்சநீதிமன்ற மொபைல் ஆப் அப்டேட் செய்யப்பட்டு வெர்ஷன் 2.0 என வரவிருக்கிறது. கூடுதல் அம்சங்களுடன் கூடிய உச்ச நீதிமன்ற மொபைல் ஆப் 2.0 தயாராக இருப்பதாகவும், இதை அடுத்து அனைத்து சட்ட அதிகாரிகள் மற்றும் அரசுத் துறைகளும் தங்கள் வழக்குகளைக் கண்காணிக்க இது உதவும் என்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார். செயலியின் புதிய பதிப்பின் மூலம், அரசுத் துறைகள் தங்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை இப்போது பார்க்கலாம் என்று தலைமை நீதிபதி கூறினார்.




ஆப் 2.0 கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் என்றும், ஐஓஎஸ் பயனர்களுக்கு ஒரு வாரத்தில் ஆப் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்."இந்த நேரத்தில் நாங்கள் கூடுதல் அம்சத்தை வழங்கியுள்ளோம், அனைத்து சட்ட அதிகாரிகளும் தங்களது அக்கவுண்ட்டில் நிகழ்நேர அப்டேட்களைப் பெறலாம். அனைத்து அரசுத் துறைகளும் தங்கள் வழக்குகளின் நிலுவைத் தன்மையை சரிபார்க்கலாம். தயவுசெய்து அதைப் பயன்படுத்தவும்," என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.


புதுப்பிக்கப்பட்ட செயலியின் சுருக்கம், மத்திய அமைச்சகத் துறையின் நோடல் அதிகாரிகள் விவரம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நிலை உத்தரவுகள், தீர்ப்பு மற்றும் தாக்கல் செய்யப்பட்ட இதர ஆவணங்கள் போன்றவற்றை இதில் பார்க்கலாம்.
2021ம் ஆண்டில், தொற்றுநோய்களின் போது நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லாமல் பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த மொபைல் செயலியை உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது.


நாட்டின் சட்டம் மற்றும் நீதி அமைப்பில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியதோடு, உச்சநீதிமன்றத்தின் 50-வது நீதிபதியாகவும் பதவி வகித்து வருகிறார்  DY சந்திரசூட்.  விதிகளை மீறுபவர்களிடமும், தவறு இழைத்தவர்களிடமும் கடுமையாக நடந்துகொள்வதோடு,  குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உணர்ந்தும் செயல்பட்டு வருகிறார். தாராளவாத மற்றும் முற்போக்கான தீர்ப்புகளுக்காக நீதித்துறையில் மட்டுமின்றி, பொதுமக்கள் மற்றும்  சமூக ஊடகங்களிலும் தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டப்படுகிறார்.


அயோத்தி தீர்ப்பு, தனிமனித உரிமை, சபரிமலை வழக்கு, சஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளின் குழுவில் இவரும் முக்கிய பங்கு வகித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சல்லிவன் & குரோம்வெல் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக,   டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், தனது சட்டபடிப்பு மற்றும் மேற்படிப்பினை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.  ஜூனியர் வழக்கறிஞராக தனது தொழிலை தொடங்கி பல வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். 2000-ஆவது ஆண்டுகளில் மும்பை நீதிமன்றத்தில் நீதிபதியான சந்திரசூட், பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அவரது நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமின்றி அவர் குறித்து பலரும் அறிந்த சுவாரஸ்ய தகவல்கள் தான் இவை. ஆனால், இதையும் தாண்டி யாரும் அறியாத ஒரு மறைமுக வாழ்க்கையையும் சந்திரசூட் வாழ்ந்ததை அவரே வெளிப்படையாக பேசியுள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.