சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் நேற்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வணிக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் தந்தையில் கையில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை:


ஷாப்பிங் மாலில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், மூன்றாவது தளத்தில் இருந்து நான்காவது தளத்திற்கு எஸ்கலேட்டரில் செல்வதற்காக கையில் குழந்தையுடன் ஒரு நபர் காத்து கொண்டிருக்கிறார்.


அந்த நபருடன் அவரின் உறவினர்களும் நான்காவது தளத்திற்கு செல்ல காத்து கொண்டிருக்கிறார்கள். அப்போது, நின்று கொண்டிருக்கும் குழந்தையை எஸ்கலேட்டரில் ஏற்ற அவரின் தந்தை முயற்சி செய்கிறார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அவரின் கையில் இருந்த 1 வயது குழந்தையை கீழே தவறவிட்டுவிடுகிறார்.  


வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி:


மாடியில் இருந்து கீழே விழுந்தவுடன் குழந்தை விழுந்த இடத்தில் மக்கள் கூடிவிடுகின்றனர். இதனை தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடி மருத்துவ உதவியை வழங்க முயற்சித்த போதிலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.


 






40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தேவேந்திர நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இம்மாதிரியான சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. கவனக்குறைவு காரணமாக நடக்கும் சம்பவங்களால் தினந்தோறும் உயிரிழப்பு ஏற்படுகிறது. குழந்தையை கையாளும்போது கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


இதையும் படிக்க: America Indian Student: தொடரும் மர்மம்! கொல்லப்பட்ட இந்திய மாணவர் - அமெரிக்காவில் என்னதான் நடக்கிறது?