அடுத்த மாதம், குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சியினரின் வியூகம் குறித்து விவாதிக்க மம்தா பானர்ஜி இன்று ஆலோசனை கூட்டம் கூட்டியுள்ளார். வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சியினரை ஒன்றிணைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. 


பாஜகவை தோற்கடிப்பதை இலக்காக கொண்டுள்ள தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான சந்திர சேகர் ராவ், இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அழைப்புவிடுக்கப்பட்டதற்கு அவர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அதேபோல, இந்த கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி புறக்கணிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


கூட்டத்தை புறக்கணித்திருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள டிஆர்எஸ், "காங்கிரஸ் கட்சியுடன் மேடையை பகிர்ந்து கொள்வதற்கான கேள்விக்கே இடம் இல்லை" என கூறியுள்ளது. ஆட்சேபனை தெரிவித்த பிறகும் காங்கிரஸ் கட்சி அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள டிஆர்எஸ், "சமீபத்தில் தெலங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பாஜகவை விமர்சிக்காமல் டிஆர்எஸ் அரசை குறிவைத்து பேசினார். குறிப்பாக, சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்துள்ளது. 


அந்த வகையில், எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் டிஆர்எஸ் உடன்படவில்லை. இந்நிலையில், ஏற்கனவே வேட்பாளரை தேர்வு செய்து, வேட்பாளரின் கருத்து கேட்கப்பட்டு, கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்யப்பட்டது? கூட்டங்களை நடத்தி, ஒருமித்த கருத்துக்கு வந்து, வேட்பாளரின் ஒப்புதலைப் பெற்று, கூட்டத்திற்குப் பிறகு பெயரை அறிவிப்பதே சரியான நடைமுறையாக இருந்திருக்கும்" என டிஆர்எஸ் சாடியுள்ளது.


பல முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் கூறுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்றும், முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பாஜகவை எதிர்க்கும் வகையில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க 22 அரசியல் கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை அவர் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், எதிர்கட்சியினரின் குடியரசு தலைவர் வேட்பாளராக சரத் பவார் அறிவிக்கப்படுவாரோ என சந்தேகம் எழுந்துள்ளது.


ஆனால், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட சரத் பவார் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெற்றிக்கு தேவையான ஆதரவு இல்லாததால் தோல்வியில் முடிவடையவுள்ள போட்டியில் இறங்க அவர் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அவரை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவும் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


கூட்டத்தை புறக்கணித்துள்ள ஆம் ஆத்மி, "குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகே, இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும்" என தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு எதிரிகளாக கருதப்படும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ், இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறது.