இந்தியத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், பில்கிஸ் பானோ வழக்கு மற்றும் பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் உட்பட பல முக்கிய விஷயங்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது. இந்த ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது பஞ்சாபில் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான மற்றொரு மனுவும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


பெகாசஸ் வழக்கில், உச்ச நீதிமன்றம் நியமித்த தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்த 29 போன்களில் 5ல் மட்டுமே மால்வேர் இருப்பதைக் கண்டறிந்ததாக தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிபுணர் குழுவுடன் ஒத்துழைக்கவில்லை என்றும், உச்ச நீதிமன்றம் முன்பு எடுத்த அதே நிலைபாட்டைதான் மத்திய அரசு நிபுணர் குழுவின் முன்பும் எடுத்துள்ளது என ரமணா தெரிவித்துள்ளார்.


பில்கிஸ் பானோ வழக்கில், குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, விடுவிக்கப்பட்டவர்களை இந்த வழக்கின் ஒரு தரப்பாக ஆஜராகுமாறு மனுதாரர்களிடம் கேட்டுக் கொண்டது. இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.


நீதிபதி ரமணா, நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்குப் பிறகு ஏப்ரல் 24, 2021 அன்று இந்தியாவின் 48வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். ஆகஸ்ட் 27, 1957 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீதிபதி நூதலபதி வெங்கட ரமணா, பிப்ரவரி 10, 1983 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். ஜூன் 27, 2000 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதி ஆனார்.


நீதிபதி ரமணா ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தலைமை நீதிபதியாக மார்ச் 10 மற்றும் மே 20, 2013 க்கு இடையில் பணியாற்றினார். அதே ஆண்டு, அவர் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் 2014 இல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஆனார்.


உச்ச நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தலைமை நீதிபதி ரமணா ஆகஸ்ட் 26 அன்று ஓய்வு பெற உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவர் பதவி வகித்த காலத்தில், அவர் 657 பெஞ்ச்களில் ஒரு பகுதியாக இருந்து 174 தீர்ப்புகளை எழுதியுள்ளார்.


தலைமை நீதிபதி ரமணா அளித்த சில குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை இங்கே பார்க்கலாம்.


ஜனவரி 2021 இல், அப்போதைய நீதிபதி ரமணா மற்றும் நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் வீட்டில் ஒரு பெண்ணின் வேலையின் மதிப்பு, அவரது கணவர் அலுவலகத்தில் பணிபுரிவதைக் காட்டிலும் குறைவானது அல்ல என்று தீர்ப்பளித்தனர். 2001 ஆம் ஆண்டு லதா வாத்வா வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் இந்த யோசனை முன்மொழியப்பட்டது.


2019ஆம் ஆண்டு மத்திய பொதுத் தகவல் அதிகாரி மற்றும் சுபாஷ் சந்திர அகர்வாலுக்கு இடையேயான வழக்கில், நீதிபதி ரமணா உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்திய தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் வரம்புக்கு உட்பட்டது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் பற்றிய தகவல்களை பொதுவில் கிடைக்கச் செய்தது.


காஷ்மீரில் இணைய முடக்கம் தொடர்பான அனுராதா பாசின் Vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இணையத்தை காலவரையின்றி இடைநிறுத்த முடியாது என்றும், இணையத்தில் வர்த்தகம் செய்வதற்கான உரிமை அடிப்படை உரிமை என்றும் கூறியது. .


2016 ஆம் ஆண்டு நபம் ரெபியா மற்றும் பாமாங் பெலிக்ஸ் Vs துணை சபாநாயகர் வழக்கில், நீதிபதிகள் என்.வி. ரமணா, ஜகதீஷ் சிங் கேஹர், மதன் பி. லோகூர், தீபக் மிஸ்ரா மற்றும் பினாகி சந்திர கோஸ் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஆளுநரின் அதிகாரங்கள் முழுமையானது அல்ல என்று கூறியது. 


சட்டப்பேரவை உறுப்பினருக்கு எதிராக பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிலுவையில் இருக்கும் போது, ​​சபாநாயகர் அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் அந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது.