மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 


பொது சிவில் சட்டத்தை கொண்ட வர முயற்சிக்கும் மத்திய அரசு:


கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது. எந்த அரசியல் கட்சிகள், தங்களின் சுய பலன்களுக்காக, இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு அவர்களை அழிக்க முற்படுகிறார்கள் என்பதை இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


தற்போது எல்லாம், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இப்படிப்பட்டவர்கள் தூண்டப்படுவதைப் பார்க்கிறோம். நீங்கள் சொல்லுங்கள், ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு சட்டமும், இரண்டாவது உறுப்பினருக்கு மற்றொரு சட்டமும் இருந்தால், அந்த குடும்பம் செயல்பட முடியுமா? இவ்வாறான இரட்டை அமைப்புடன் நாட்டை நடத்த முடியுமா?" என்றார்.


"பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது"


பிரதமர் மோடியின் பேச்சின் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருவது தெளிவாகிறது. இதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், "உள்நோக்கம் கொண்ட  பெரும்பான்மை அரசாங்கத்தால் பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. ஏனெனில், அது மக்களிடையே பிளவுகளை விரிவுபடுத்தும்" என்றார்.


இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் பேசும்போது, ஒரு நாட்டை குடும்பத்துடன் ஒப்பிட்டுள்ளார். சுருக்கி பார்த்தால் அவரது ஒப்பீடு உண்மையாகத் தோன்றினாலும், களத்திலோ உண்மை வேறாக உள்ளது. ஒரு குடும்பம் ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டது. ஆனால், ஒரு தேசமோ அரசியல் சட்ட ஆவணமான அரசியலமைப்பின் மூலம் ஒன்றிணைக்கப்படுகிறது.


ஒரு குடும்பத்தில் கூட பன்முகத்தன்மை உள்ளது. இந்திய அரசியலமைப்பு, இந்திய மக்களிடையே பன்முகத்தன்மையையும் வேறுபாடுகளையும் அங்கீகரிக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது ஒருவரின் விருப்பமாக இருந்தாலும், உள்நோக்கம் கொண்ட  பெரும்பான்மை அரசாங்கத்தால் அதை மக்கள் மீது திணிக்க முடியாது. ஏனெனில், அது மக்களிடையே பிளவுகளை விரிவுபடுத்தும்.


பொது சிவில் சட்டத்தை எளிய நடைமுறை போல தோன்ற செய்கிறார் பிரதமர். தற்போதைக்கு, அது சாத்தியமில்லை என்று கடந்த சட்ட ஆணையத்தின் அறிக்கையை அவர் படிக்க வேண்டும். பாஜகவின் சொல்லாலும் செயலாலும் இன்று நாடு பிளவுபட்டுள்ளது. மக்கள் மீது பொது சிவில் சட்டத்தை திணித்தால் அது பிளவுகளை விரிவுபடுத்தும்.


பொது சிவில் சட்டத்தை பிரதமர் மோடி கடுமையாக ஆதரித்து பேசுவதன் மூலம் பண வீக்கம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு குற்றங்கள், பாகுபாடு, மாநிலங்களின் உரிமைகள் மறுக்கப்படுவது போன்ற பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப முயற்சிக்கிறார். நல்லாட்சி தர முடியாததால், வாக்காளர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி அடுத்த தேர்தலில் வெற்றி பெற பாஜக பொது சிவில் சட்டத்தை கொண்ட வர பார்க்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.