சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்த இருவரும், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படையை சேர்ந்தவர்கள்.


இன்று நண்பகல் அளவில், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல் படை இணைந்து துர்பேடாவில் சோதனை நடத்தினர். சோதனை நடத்திவிட்டு, நாராயண்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே ஐஇடி குண்டு வெடித்தது.


மாவோயிஸ்ட்கள் தாக்குதல்:


இதில், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படையை சேர்ந்த மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த அமர் பன்வார் மற்றும் ஆந்திராவின் கடப்பாவைச் சேர்ந்த கே. ராஜேஷ் கொல்லப்பட்டனர். இருவருக்கும் 36 வயதாகிறது.  தாக்குதலில் அடைந்த காயமடைந்த நாராயண்பூர் காவல்துறையைச் சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது.


சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. 


குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளில், (நக்சல்) வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. இறப்புகள் (மாவோயிஸ்ட் வன்முறையில்) 70 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட (எண்ணிக்கை) மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன. இருப்பினும், சில பகுதிகளில் அவ்வப்போது நக்சல் தாக்குதல் நடந்து வருகிறது.


நடந்தது என்ன?


இப்படிப்பட்ட சூழலில், கொட்லியார் கிராமத்தில் மாவோயிஸ்ட் தாக்குதல் நடந்துள்ளது. சமீபத்தில் கூட, ஜார்க்கண்ட் சத்ரா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் வீர மரணம் அடைந்தனர்.


இந்தாண்டு தொடக்கத்தில், நக்சல்களின் கோட்டை என கருதப்படும் சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில் இரண்டு போலீஸ் முகாம்களை பாதுகாப்புப் படையினர் அமைத்தனர். இதை தொடர்ந்து, குடியரசு தினத்தன்று, சுக்மா-பிஜப்பூர் பகுதியில் முதன்முறையாக இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.


கடந்த நாற்பது ஆண்டுகளிலேயே 2022ஆம் ஆண்டுதான், நக்சல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மிகக் குறைவான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இறப்புகள் பதிவாகியுள்ளது. நக்சலிசம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு. அதன் அனைத்து வடிவங்களிலும் அதை வேரோடு பிடுங்குவதில் நாம் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.