பாஜகவின் கோட்டையாக இருந்த சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். இந்த உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.  


சத்தீஸ்கரில் அதிரடி காட்டும் பாஜக:


2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.


காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இச்சூழலில், சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


பெண்களை குறிவைத்து தேர்தல் அறிக்கை:


இப்படிப்பட்ட சூழலில், சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பெண்களை குறிவைத்து தயாரிக்கப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெண்களை கவரும் வகையில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.


திருமணமான பெண்களுக்கும் நிலம் இல்லாத விவசாய கூலிகளுக்கும் நிதியதவி, நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு 3,100 ரூபாய், ஏழை குடும்பங்களுக்கு 500 ரூபாய் கேஸ் சிலிண்டர் என பல முக்கிய அறிவிப்புகள் பாஜக தேர்தல் அறிக்கையில் வெளியாகியுள்ளன.


அதுமட்டும் இன்றி, சத்தீஸ்கரில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்பப்படும் என்றும் மாநில மக்களை ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வோம் என்றும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.


ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, "தேர்தல் அறிக்கை என்பது பா.ஜ.க.வுக்கு வெறும் அறிக்கையல்ல. நாங்கள் அளிக்கும் வாக்குறுதியின் ஆவணம் ஆகும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, நாங்கள் (பாஜக தலைமையிலான மத்திய அரசு) சத்தீஸ்கர் மாநிலத்தை (2000இல்) அமைத்தோம்.


மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், 'கிருஷி உன்னதி திட்டம்' தொடங்கப்படும். இதன் கீழ் ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் (விவசாயிகளிடமிருந்து) குவிண்டாலுக்கு ரூ. 3100 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் 'மஹதாரி வந்தன் திட்டத்தை' பாஜக அரசு தொடங்கும்.


தீன்தயாள் உபாத்யாய் கிரிஷி மஜ்தூர் யோஜனா தொடங்கப்படும். இதன் கீழ் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தலா 500 ரூபாய்க்கு வழங்கப்படும்" என்றார்.