சந்திராயன் 3 விண்கலம் பூமியிலிருந்து நிலவுக்கு செல்லும் தூரத்தில் மூன்றில் இரண்டு பங்கு கடந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.






சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து  ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றதும், அதற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டு புவியின் நீளவட்டப்பாதையில் சுற்ற வைக்கப்பட்டது. 15 நாட்கள் ஒவ்வொரு 170 கிலோ மீட்டருக்கு உந்துதல் வழங்கப்பட்டு டிரான்ஸ் லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவு பாதையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நுழைந்தது.


நிலவின் சுற்றுப்பாதையில் நுழையும் சந்திரயான் 3: 


ஆகஸ்ட் 1 ஆம் தேதி சந்திரயான் 3 பூமியின் நீள்வட்டார சுற்றுப்பாதையில் இருந்து அதிகபட்ச உந்துதல் கொடுக்கப்பட்டு நிலவு பாதையில் நுழைந்தது. இதை கடந்ததும் அடுத்த கட்டங்கள் அனைத்தும் மிகவும் சவாலானதாக இருக்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சுமார் 5 மணி அளவில் சந்திரயான 3 விண்கலம் நிலவு பாதையில் இருந்து நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நுழையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது lunar orbit injection  என்ற நிகழ்வு மூலம் விண்கலம் நிலவின் வட்டார சுற்றுப்பாதைக்குள் நுழையும்.


சவாலான இறுதி கட்டங்கள்


இதனை தொடர்ந்து பல சவாலான கட்டங்களை சந்திரயான் 3 கடக்க உள்ளது. முக்கியமாக விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையின் உயரத்தை சிறிது சிறிதாக குறைத்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிலைநிறுத்துவதோடு, அதே தொலைவில் நிலவை சுற்ற வைப்பது முக்கிய கட்டமாகும். 100 கிமீ தூரத்தை எட்டியபின் விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில்தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியையும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், சந்திரயான் 3 நிலவின் அதன் ஆராய்ச்சி தொடங்கி தரவுகளை வழங்கும். இந்த நிகழ்வு ஆகஸ்ட் 23 தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.