வெற்றி பயணத்தை தொடரும் சந்திரயான் - 3:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.


நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தில் பல கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன.


தொடர்ந்து கலக்கி வரும் சந்திரயான் 3 ரோவர்:


விண்கலத்தில் அனுப்பப்பட்ட ரோவர், கடந்த 9 நாள்களாக நிலவை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. நிலவில் பள்ளம் இருந்தாலும் அதை முன்பே கண்டறிந்து, மாற்று பாதையில் ரோவர் நகர்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சந்திரயான் - 3 புதிய சாதனை படைத்துள்ளது. நிலவில் 100 மீட்டர் தூரத்தை கடந்து ரோவர் உலா வந்து கொண்டிருப்பதாக இஸ்ரோ இன்று அறிவித்துள்ளது.


இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். நிலவில் உள்ள நீராதாரம்,  கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.


இதை தொடர்ந்து, சந்திரயான் - 3 ரோவரும் லேண்டரும் ஸ்லீப் மோடில் வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் விளக்குகையில், "ரோவர் மற்றும் லேண்டரை தூங்க ஸ்லீப் மோடில் வைக்கும் செயல்முறை ஓரிரு நாட்களில் தொடங்கும். ஏனெனில், அவை இரவை தாங்க வேண்டும்" என்றார்.


அனுப்பப்பட்ட கருவிகளின் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ, நிலவின் வெப்பநிலை தொடர்பான ஆய்வின் தகவல்களை
இஸ்ரோ வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் முக்கிய தகவல் ஒன்றை இஸ்ரோ பகிர்ந்தது.


நிலவில் கனிமம் இருப்பதை உறுதி செய்து உலக நாடுகளை வியக்கவைத்த இஸ்ரோ:


நிலவில் சல்பர் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. நிலவில் கனிமம் இருப்பதை, ரோவரில் அனுப்பப்பட்ட லேசர் இன்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி கண்டுபிடித்தது. அதேபோல, எதிர்பார்த்தப்படியே, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட வேதியியல் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஹைட்ரஜனை (H) தேடும் பணி நடந்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்தது.


முன்னதாக, பல்வேறு பள்ளங்களில் பதிவான வெப்பநிலை மாறுபாடுகளை ரோவரில் அனுப்பப்பட்ட ChaSTE கருவி பதிவு செய்து வெளியிட்டது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பல்வேறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.