சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்துள்ள விக்ரம் எனும் லேண்டர் அமைப்பு, எப்படி நிலவின் மேற்பகுதியில் தரையிறங்கும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். 


சந்திரயான் 3 திட்டம்:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம், கடந்த மாதம் 14ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்டது. 20 நாட்கள் பயணத்திற்குப் பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்த விண்கலம், கடந்த 16ம் தேதி நிலவிற்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, இரண்டு தினங்களுக்கு முன்பாக விண்கலத்தில் இருந்து விக்ரம் எனும் லேண்டர் அமைப்பு தனியாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து, வரும் 23ம் தேதியன்று மாலை சந்திரயான் 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. அந்த 15 நிமிடங்கள் தான் சந்திரயான் 3 திட்டத்தின் மிக முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.


கடந்த முறை தந்த பாடம்:


சந்திரயான் 2 திட்டம் லேண்டரை தரையிறக்கும் கட்டத்தில் தான் தோல்வியுற்றது. இதனால் தரையிறக்கும் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் சந்திரயான் 3 திட்டத்தில் லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த தவறுகளை பகுப்பாய்வு செய்து, இந்த முறை அதிலிருந்து மேம்படுத்தப்பட்ட லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த முறை பல்வேறு கட்டங்களாக லேண்டர் தரையிறக்கப்பட உள்ளது.


முதற்கட்டம்: லேண்டர் அமைப்பு தற்போது நிலவில் இருந்து குறைந்தபட்ச தூரமாக 113 கிமீ தொலைவிலும், அதிகபட்சமாக 157 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. தொடர்ந்து படிப்படியாக இந்த தூரம் குறைக்கப்படும். அதன்படி, குறைந்தபட்ச தூரமாக 30 கிமீ தொலைவிலும், அதிகபட்சமாக 100 கிமீ தொலைவிலும் லேண்டர் நிலை நிறுத்தப்பட்டு, ஆகஸ்ட் 23ம் தேதியன்று லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவதற்கான முதற்கட்டம் தொடங்கும். அந்த தொடக்கத்திலிருந்து நிலவில் தரையிறங்குவது என்பது வெறும் 15 நிமிடங்களில் நடைபெற உள்ளது.


அதன்படி, லேண்டரின் நான்கு முனைகளிலும் நான்கு கால்கள் இருக்கும். அதில்  பொருத்தப்பட்டுள்ள ராக்கெட்டுகள் கீழ்நோக்கி இருக்காமல், பக்கவாட்டை நோக்கியிருக்கும். அந்த ராக்கெட்டுகளை இயக்கினால் அதற்குப் பின்புறத்தில், அதாவது லேண்டரின் மேல் பகுதியில் ஒரு தள்ளுவிசை கிடைக்கும். அப்போது முன்னோக்கிச் செல்லும் லேண்டரின் வேகம் குறையும். அப்படி வேகம் குறைந்தால் அது மென்மையாகத் தரையிறங்கும்.


முப்பது கிலோ மீட்டர் தொலைவில் நிலவைச் சுற்றி வரும்போது சந்திரயானின் வேகம் மணிக்கு 6000 கிலோ மீட்டர் ஆக இருக்கும். தள்ளுவிசை காரணமாக அந்த வேகம் படிப்படியாகக் குறைந்து நிலாவிலிருந்து 7.4 கி.மீ தூரத்திற்கு வரும்போது அதன் வேகம் மணிக்கு 1200 கி.மீ. என்ற அளவுக்கு குறையும். இந்த மொத்த நிகழ்வும் வெறும் 10 நிமிடங்களில் முடிவடைய வேண்டும். மீதமுள்ள ஐந்து நிமிடங்களில் லேண்டர் ஏழு கட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய வேண்டும்.


இரண்டாவது கட்டம்:



இரண்டாவது கட்டத்தில் 7.4 கி.மீ உயரத்தில் உள்ள லேண்டர் படிப்படியாக 6.8 கி.மீ உயரத்திற்கு கொண்டு வரப்படும். இந்தக் கட்டத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும். முதலாவதாக பக்கவாட்டில் பார்த்தவாறு இருக்கும் லேண்டரின் கால்களை தரையிறக்கத்திற்கு ஏற்றவாறு, 50 டிகிரி அளவிற்க் கீழ்நோக்கித் திருப்பப்படும். அடுத்த நிகழ்வில் தான், நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையில் லேண்டர் சரியாகச் செல்கிறதா அல்லது பாதையைச் சிறிதளவு மாற்றி, சரிசெய்ய வேண்டுமா என்ற முடிவு எடுக்கப்படும். லேண்டரில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு கருவி இதற்கான பணிகளைச் செய்யும். 


தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்வது எப்படி?




விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவு கருவியில் பொருத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தில், ஏற்கெனவே லேண்டர் தரையிறங்க வேண்டிய பகுதி தொடர்பான படம் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தரையிறக்கத்தின் போது, லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு கருவி அதன் பாதையைப் படம்பிடித்துக்கொண்டே செல்லும். அவற்றை ஏற்கனவே பதிவேற்றப்பட்ட படங்களோடு ஒப்பிட்டு, சரியான பாதையைக் கண்டறிந்து பயணத்தை மேற்கொள்ளும்.


மூன்றாவது கட்டம்:



மூன்றாவது கட்டத்தில் நிலாவின் மேற்பரப்பில் இருந்து 800 மீட்டர் உயரத்திற்கு லேண்டர் கொண்டுவரப்படும். இதற்காக பக்கவாட்டில் 50 டிகிரிக்கு திருப்பப்பட்ட ராக்கெட் பொருத்தப்பட்ட லேண்டரின் கால்கள், செங்குத்தாக கீழ்நோக்கி நகர்த்தப்படும். இதன் மூலம் மணிக்கு 1200 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்த லேண்டர், 800 மீட்டர் உயரத்திற்கு வரும்போது அதன் முன்னோக்கிச் செல்லும் வேகம் பூஜ்ஜியமாகிவிடும்.


நான்காவது கட்டம்:





நன்காவது கட்டத்தில் லேண்டரின் ராக்கெட் விசை குறைக்கப்பட்டு, ஒவ்வொரு அடியாக 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்தை அடையும். அந்த சூழலிலேயே 22 விநாடிகளுக்கு லேண்டர் அந்தரத்திலேயே மிதக்க தொடங்கும். அப்போது, நிலவின் ஈர்ப்பு விசையால் லேண்டர் கீழே இழுக்கப்படாமல் இருக்க, அதன் கால்களில் உள்ள ராக்கெட்டுகள் மூலம் மேல்நோக்கிய தள்ளுவிசையைக் கொடுக்கப்பட்டு நிலைநிறுத்தப்படும். இந்த நேரத்தில்,  தரையிறங்கும் இடத்தில் ஏதேனும் இடர்பாடுகள் உள்ளனவா என்பது கேமராக்கள் மூலம் ஆராயப்படும்.  லேண்டரின் கால்கள் இடறும் வகையிலான பாறைகள் அல்லது குழிகள் என ஏதேனும் இருந்தால், அது கவிழ்ந்து விழ வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு தரையிறக்கத்திற்கு ஒரு சமதள பரப்பு தேர்வு செய்யப்படுகிறது. இதற்கான செயற்கை நுண்ணறிவு லேண்டர் அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் தான் நிலாவின் எந்தப் பகுதியில் லேண்டர் தரையிறங்கும் என்பது முட்வு செய்யப்படும்.




ஐந்தாவது கட்டம்:



தரையிறங்குவதற்கான சரியான இடத்தை தேர்வு செய்த பிறகு, 150 மீட்டர் உயரத்தில் இருந்து  60 மீட்டர் உயரத்திற்கு லேண்டர கீழே இறங்குவதுதான் ஐந்தாவது கட்டம். இந்த நிலையில்,  லேண்டரில் இணைக்கப்பட்டுள்ள லேசர் டாப்லர் வெலாசிமீட்டர் என்ற புதிய கருவி தனது பணியை தொடங்கும். அதன்படி,  இந்தக் கருவி நிலவின் தரையை நோக்கி ஒரு லேசர் கற்றையை அனுப்பும். அந்த லேசர் கற்றை திரும்பி மேல்நோக்கி வருவதை உணந்து,  விண்கலம் எவ்வளவு வேகத்தில் கீழ்நோக்கிச் செல்கிறது என்பது நொடிக்கு நொடி கணக்கிடப்படும். அதனடிப்படையில் தேவைப்படும் வேகத்தில் லேண்டர் தரையிறங்கும் வேலையை அதில் உள்ள கணினி செய்யும். அந்த அளவுக்கு ராக்கெட்டை நுணுக்கமாக இயக்கும் வேலையை செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி மேற்கொள்ளும்.


ஆறாவது கட்டம்:



ஆறாவது கட்டத்தில் 60 மீட்டர் உயரத்தில் இருக்கும் லேண்டர் 10 மீட்டர் உயரத்திற்கு கொண்டு வரப்படும்.  இந்தச் சூழலில் பயன்படுவதற்காக லேண்டரின் கீழ்பகுதியில் தரையைப் பார்த்தவாறு ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  விண்கலம் கீழ்நோக்கிச் செல்லும்போது அது எடுக்கும் புகைப்படங்களில் நிலவின் தரைப்பரப்பு எவ்வளவு வேகமாகப் பெரிதாகிறது என்பதை அடிப்படையாக வைத்து எவ்வளவு வேகத்தில் லேண்டர் கீழ்நோக்கி செல்கிறது என்பது கணக்கிடப்படுகிறது. இது ஒரு கூடுதல் பாதுகாப்பு அம்சமாக பொருத்தப்பட்டுள்ளது.


ஏழாவது கட்டம்:



நிலவின் தரைப்பரப்பில் இருந்து வெறும் 10 மீட்டர் உயரத்தில் லேண்டர் இருக்கும் இந்த சூழலில், ராக்கெட்டுகளின் செயல்பாடு நிறுத்தப்படும். காரணம் நிலாவின் தரைப்பரப்பு முழுக்க மிகவும் மெல்லிய மண் துகள்கள் நிறைந்துள்ளதால்,  தரையை எட்டும் வரை ராக்கெட்டை இயக்கினால் அந்த மண் துகள்கள் புழுதியாக மேலெழும்பி லேண்டர் மீது படிய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அதன் மேற்பரப்பில் உள்ள சூரியத் தகடுகளில் படிந்து, மின்சார உற்பத்தி செய்ய முடியாத அபாயம் ஏற்படலாம். அதை தவிர்க்கவே ராக்கெட்டுகள் முன்கூட்டியே செயலிழக்கச் செய்யப்படுகின்றன. தொடர்ந்து,  நொடிக்கு 2 மீட்டர் என்ற வேகத்தில் லேண்டர் தரையிறங்க வேண்டும் என்பதே திட்டமாக உள்ளது. அதேநேரம், எதிர்பாராதவிதமாக நொடிக்கு 3 மீட்டர் என்ற வேகத்தில் விழுந்தாலும்கூட, அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு லேண்டரின் கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டமான 800 மீட்டர் உயரத்தில் இருந்த லேண்டர் ஏழாவது கட்டமான, பத்து மீட்டர் எனும் உயரத்தை வந்து சேர வெறும் 4:30 நிமிடங்களே ஆகும். இந்த காலகட்டம் தான் சந்திரயான் 3 திட்டத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் லேண்டர் எப்படி இயங்க வேண்டும், பக்கவாட்டில் நகர வேண்டுமா, கீழே எவ்வளவு வேகத்தில் இறங்க வேண்டும் என அனைத்தையும் அதன் உள்ளே இருக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு கணினிதான் தீர்மானிக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். 


எட்டாவது கட்டம்:



மிக முக்கியமான 270 நொடிகளை வெற்றிகரமாக கடந்து லேண்டர் நிலவை அடைந்த பிறகு, அதன் தரையிறக்கத்தால் மேலே எழும்பிய தூசு அனைத்தும் அடங்கும் வரை எந்த நடவடிக்கையும் இருக்காது. தூசு முழுவதும் அடங்கிய பிறகு இறுதிக்கட்டமாக லேண்டர் அமைப்பின் ஒருபக்கம் கதவை போன்று சாய்தளமாக திறக்கும். தொடர்ந்து அதிலுள்ள ரோவர் வெளியே வரும். அப்போது, லேண்டரை ரோவரும், ரோவரை லேண்டரும் புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அந்த கண்கொள்ளா காட்சியை காண தான், 140 கோடி இந்தியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அறிவியல் உலகமே காத்துக்கிடக்கிறது.