நிலவை ஆராய்ச்சி செய்வதற்கு அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற முன்னணி நாடுகள் ஈடுபாடு காட்டி வரும் நிலையில், இந்தியாவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட உள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சந்திரயான் 3 விண்கலத்திற்கான கவுண்டவுன் எப்போது?


இந்த நிலையில், 'சந்திரயான் 3' விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவுபெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு, சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், அதன் நோக்கத்தை நிறைவு செய்யாமல் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. சந்திரயான்-2 விண்கலத்தில், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக்யான் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை அனுப்பப்பட்டன.


நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் லேண்டரான விக்ரம்,  திட்டமிட்டபடி தரையிறங்கினாலும் நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.1 கி.மீ. உயரத்தில் லேண்டர் வரும் போது திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது.  'சாப்ட் லேண்டிங்' எனப்படும் மெதுவாகத் தரையிறங்குவதற்குப் பதில், வேகமாக தரையிறங்கி (ஹார்ட் லேண்டிங்) விழுந்தது. இதன் காரணமாக, ரோவரை திட்டமிட்டபடி தரையிறக்க முடியவில்லை.


எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள சந்திரயான் 3:


இச்சூழலில், சந்திரயான்-3 குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், "சந்திரனைப் பற்றிய நமது புரிதலை சந்திரயான்-3 மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் சந்திரனின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கி, ரோபோ ரோவரை இயக்குவதாகும்.


ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஹெவி-லிஃப்ட் ஏவுகணையைப் பயன்படுத்தி சந்திரயான்-3 ஏவப்பட உள்ளது" என்றார்.


சந்திரயான்-3 திட்டத்தின் மதிப்பு, 615 கோடி ரூபாய் ஆகும். அபாயங்களைக் குறைத்து, வெற்றிகரமான பணியை உறுதி செய்வதற்கும் கடுமையான சோதனை மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு சந்திரயான்-3 உட்படுத்தப்பட்டுள்ளது. பேலோட் கட்டமைப்பு உள்ளிட்ட வடிவமைப்பு, முந்தைய சந்திரயான திட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த முறை, வெற்றியை உறுதி செய்வதற்காக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இஸ்ரோ எடுத்துள்ளது. சந்திரயான்-2 போன்றே லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை சந்திரயான்-3இல் அனுப்பப்பட உள்ளது. ஆனால், ஆர்பிட்டரை எடுத்துச் செல்லாது. தகவல்தொடர்பு செயற்கைக்கோள் போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட உந்துவிசை பகுதி, விண்கலம் 100 கிமீ சந்திர சுற்றுப்பாதையில் செல்லும் வரை லேண்டர் மற்றும் ரோவரை எடுத்துச் செல்லும்.
 
இந்த விண்கலம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக அறிவியல் சமூகத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னதாக இயக்கப்பட்ட விண்கலங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவத்தை கொண்டு எதிர்கால நிலவு தொடர்பான ஆய்வை மேற்கொள்ள சந்திரயான்-3 உதவும்.