இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி 
விண்ணில் செலுத்தப்பட்டது. 40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள  விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.


யூடியூபிலும் சாதனை படைத்த சந்திரயான் 3:


இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டரை இஸ்ரோ தரையிறக்கியது. சந்திரயான் 3 திட்டத்தின் மிக முக்கிய கட்டமான இந்த தரையிறக்குதல் நிகழ்வானது, மொத்தம் 8 கட்டடங்களாக நடைபெற்றது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்த சந்திரயான் 3 திட்டம், விண்வெளி ஆராய்ச்சியில் மட்டும் அல்ல யூடியூபிலும் பெரும் சாதனையை படைத்துள்ளது.


சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்குவதை யூடியூப் லைவில் மட்டும் 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். இதற்கு முன்பு, ஸ்பேயின் நாட்டின் ஐபாய் யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லைவை 34 லட்சம் பேர் பார்த்திருந்தனர். இதுவே உலக சாதனையாக இருந்தது. தற்போது, சந்திரயான் 3 லைவை 36 லட்த்திற்கும் மேற்பட்டோர் பார்த்ததன் மூலம் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 


வரலாற்றில் தடம் பதித்த இந்தியா:


முன்னதாக, நான்கு என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறக்குவதற்காக கடைசி 30 கிமீ தொலைவில் இரண்டு என்ஜின்களை துண்டித்தது.


இதற்கு முன்னதாக, மூன்று நாடுகள் மட்டுமே நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துள்ளது. அமெரிக்க, சோவியத் ஒன்றியம் (தற்போது ரஷியா), சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து அந்த பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இந்தியாவின் சாதனைக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோ:


பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "இந்த சாதனைக்காக இஸ்ரோ, அதன் விஞ்ஞானிகளை மனதார வாழ்த்துகிறேன். நான் தென்னாப்பிரிக்காவில் இருக்கலாம். ஆனால், என் இதயம் எப்போதும் சந்திரயான் திட்டத்துடன்தான் இருக்கிறது. இது, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் கிடைத்த வெற்றி. நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் அடுத்தகட்டத் திட்டம். சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும்'' என்றார்.


சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்1 திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் வெள்ளிக்கு விண்கலம் அனுப்பும் திட்டமும் இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.


சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் கூறுகையில், "நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.இந்த தருணத்திற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.