தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை நந்தியால் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.


என்ன நடந்தது..? 


 சிஐடியின் டிஐஜி ரகுராமி ரெட்டி தலைமையிலான காவல்துறையின் கூட்டுப் பணியாளர்கள் ஆர்கே ஆபரேட் காரிடாரில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் முகாமுக்கு அதிகாலை 3 மணியளவில் அவரைக் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர். போலீசார் அங்கு சென்றபோது சந்திரபாபு நாயுடு தனது கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.


அப்போது அந்த இடத்தில் இருந்த ஏராளமான தெலுங்கு தேசம் கட்சி ஊழியர்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சந்திரபாபு நாயுடுக்கு சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) வீரர்களும், கைது செய்து வந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி,  அதிகாலை 5.30 மணி வரை நீங்கள் அவரை கைது செய்யக்கூடாது. இது சட்டத்தில் இடமில்லை என தெரிவித்துள்ளனர். 


இதைத் தொடர்ந்து, காலை 6 மணியளவில், காவல்துறையினர் சந்திரபாபு நாயுடு தங்கியிருந்த கேரவானின் கதவை தட்டி அவரை கீழே இறக்கி கைது செய்தனர்.


என்ன வழக்கு தொடரப்பட்டது..?


சிறைச்சாலை நடைமுறைச் சட்டத்தின் பகுதி 50 (1) (2) க்குக் கீழ் வெளியிடப்பட்ட நோட்டீஸின் படி, 120(8), 166, 167, 418, 420, 465, 468, 471, 409, 201, 109 ஆர்டபிள்யூ 34 மற்றும் 37 ஐபிசி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், சந்திரபாபு நாயுடு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில், ஒரு சில வழக்குகள் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கைது நடவடிக்கைக்கு பிறகு தகவல் தெரிவித்த சிஐடி மூத்த அதிகாரி ஒருவர், “எங்களிடம் ஆதாரம் உள்ளது. அதை உயர் நீதிமன்றத்தில் கொடுத்தோம். ரிமாண்ட் அறிக்கையில் அனைத்து உள்ளடக்கங்களும் உள்ளன. அவரை விஜயவாடா அழைத்துச் செல்வதற்கு முன் ரிமாண்ட் ரிப்போர்ட் கொடுப்போம்” என்று தெரிவித்தார். 


ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளதா..?


ஆந்திர முன்னாள் முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் கொம்மாரெட்டி பட்டாபிராம் கூறுகையில், "சட்டவிரோதமாக சந்திரபாபு நாயுடுவை கைது செய்யும் நடவடிக்கையை நேற்று இரவு முதல் ஆந்திரா காவல்துறை மற்றும் சிஐடி தொடங்கியது. சந்திரபாபு நாயுடுவின் முகாமிற்கு வெளியே நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். சந்திரபாபு நாயுடுவுடன் முகாம் தளத்தில் தங்கியிருந்த அனைத்து தலைவர்களையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர்... பேருந்தில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு, ‘என்ன காரணத்துக்காக என்னை கைது செய்கிறீர்கள்?’ என்ற எளிய கேள்வியைக் கேட்டார்... காவல்துறையிடம் பதில் இல்லை.


கடந்த இரண்டு வருடங்களாக திறன் மேம்பாட்டு வழக்கு நாடகம் நடந்து கொண்டிருக்கிறது & தேர்தலுக்கு முன்பு சந்திரபாபு நாயுடுவை ஊழல் அரசியல்வாதி என்று முத்திரை குத்துவதற்காகவே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். நாட்டிலேயே அதிக ஊழல் செய்த அரசியல்வாதி ஜெகன் மோகன் ரெட்டிதான்” என்று தெரிவித்தார்.