தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


2018ஆம் ஆண்டில் தன்பாலின காதல் என்பது குற்றமற்றது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் அளித்தது. இது அச்சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. 2018ஆம் ஆண்டில் செப்டம்பர் 7ஆம் தேதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்திய தண்டனை சட்டத்தின் 377ஆவது சட்டப்பிரிவை நீக்கி, இந்தியாவில் தன்பாலின காதல் குற்றமற்றது என உறுதிப்படுத்தியது. ஆனால் அவர்களின் திருமணம் சட்ட அங்கீகாரம் பெறவில்லை.


இந்நிலையில், தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த அந்த மனுக்களின் விவரம் வருமாறு: திருமணத்துக்கான இணையரை தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அரசியல் சாசன பிரிவு 14, 21-ஐ மீறுவதாகும். எனவே தன்பாலின உறவாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.


இந்த வழக்கில் மனுதாரர்கள், திருமணம் மற்றும் அதோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்களை மாற்றியமைக்க வேண்டும் என கோரியுள்ளனர். மேலும், குடும்ப வன்முறை சட்டம் உள்ளிட்ட பிற விதிகளை, தன்பாலின உறவாளர்களின் திருமணங்களுக்கு செயல்படுத்த இயலாது.


இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அடங்கிய அமர்வு , மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.


மத்திய அரசு எதிர்ப்பு:


இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மத்திய அரசு, ஒரே பாலினத்தவர் இணைந்து வாழ்வது என்பது இந்தியக் குடும்பக் கொள்கையுடன் ஒப்பிடத்தக்கது அல்ல. கணவன் ஆணாகவும், மனைவி பெண்ணாகவும் இருந்து இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாக கருத முடியும் என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணத்திற்கு நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படுவதற்கு மனுதாரர்கள் அடிப்படை உரிமை கோர முடியாது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த பதில் மனுவை மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்தார்.


எந்தெந்த நாடுகளில் அனுமதி:


உலகளவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா உள்ளிட்ட நாடுகள் தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க மறுத்துள்ளது எல்ஜிபிடிக்யூ சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து சட்டப் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.