2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படுவது தொடர்பாக பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்க்ஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) படி, புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 84 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், கடந்த மாதம் 3ம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 2000 ரூபாய் மதிப்பு 2.51 சதவிகிதம் என்றும் தெரிவித்தார். 


தற்போதைய நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்து பரிசீலனை இல்லை என்றும், 2000 ரூபாய் நோட்டுகளை போல் வேறு ஏதேனும் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறும் திட்டம் எதுவும் அரசிடம் உள்ளதா என்ற கேள்விக்கு, இல்லை என்றும் தெரிவித்தார். 


மேலும், ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்புள்ள கரன்சி ரூபாய் நோட்டுகள் மட்டும் நாணயங்கள் வடிவில் கிடைக்கிறது.


அதிகளவில் திரும்ப பெறுப்படும் 2000 ரூபாய் நோட்டுகள்: 


கடந்த மே மாதம் 19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து புழக்கத்தில் இருந்த ரூபாய் 2000 நோட்டுகள் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. 


அதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “திரும்பப்பெறும் உத்தரவை பிறப்பித்த ஒரு மாதத்திற்குள், 2,000 ரூபாய் கரன்சி நோட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு வங்கிகளுக்கு திரும்பிவிட்டன.


 மார்ச் 31ஆம் தேதி வரையில் சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் (50 சதவிகித நோட்டுகள்) திரும்பி வந்துள்ளன. அதில், 85 சதவீதம் டெபாசிட்டாகவும் மீதமுள்ளவை வேறு நோட்டுகளாகவும் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. 


மார்ச் 31ஆம் நிலவரப்படி, 3.62 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இதில், 2.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.  


இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளிடம் திருப்பி அளிக்க செப்டம்பர் 30ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு என்பது மாற்ற முடியாத ஒன்று அல்ல. மக்கள் தங்கள் பணத்தைக் கோருவதற்கு அவசரப்பட வேண்டியதில்லை. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதால் பொருளாதாரத்தில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் நான் காணவில்லை" என்றார்.


தொடந்து பேசிய அவர், “செப்டம்பர் 30 காலக்கெடுவுக்குப் பிறகு இந்த நோட்டுகளின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்வேனா என்பது உறுதியாகத் தெரியவில்லை" என்று குறிப்பிட்டார்.