அடுத்தடுத்து மாநில தேர்தல்கள் நடைபெறும் நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை வரும் 2028ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் வரை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


கொரோனா பாதிப்பின் போது, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கும் ( கரீப் கல்யாண் அன்ன யோஜனா) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இத்திட்டமானது ( கரீப் கல்யாண் அன்ன யோஜனா), விரைவில் முடிவுக்கு வர இருந்தது.


செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்:


இந்த நிலையில், பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழும் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை அதன் தற்போதைய வடிவத்தில் இந்த ஜூலை மாதம் முதல் டிசம்பர் 2028 வரை தொடர ஒப்புதல் அளித்தது.


அரிசி செறிவூட்டப்பட்டு வழங்கும் திட்டமானது, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டத்தின்  (உணவு மானியம்) ஒரு பகுதியாக மத்திய அரசின் 100% நிதியுதவியுடன் ஒரு மத்திய அரசின் முயற்சியாக தொடரும்.


அதன்படி, நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அவசியம் குறித்து 75 வது சுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்றிய உரையின் அடிப்படையில், நாட்டில் ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக "பொது விநியோக முறை (TPDS), பிற நலத்திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை (ICDS), அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல்" என்ற முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


ரத்த சோகைக்கு முடிவு கட்டப்படுமா?


கடந்த 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அரிசி செறிவூட்டு வழங்கும் திட்டத்தை மார்ச் 2024 க்குள் நாடு முழுவதும் படிப்படியாக செயல்படுத்த முடிவு செய்தது.  


மூன்று கட்டங்களும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, அரசின் அனைத்து திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கான அனைவருக்கும் இலக்கு மார்ச் 2024 க்குள் எட்டப்பட்டுள்ளது. கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டு இடையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் படி, ரத்த சோகை இந்தியாவில் ஒரு பரவலான பிரச்சினையாக உள்ளது.


இது பல்வேறு வயதுக் குழுக்கள் மற்றும் வருமான நிலைகளில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களை பாதிக்கிறது. இரும்புச்சத்து குறைபாட்டைத் தவிர, வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற பிற வைட்டமின் மற்றும் தாதுப் பற்றாக்குறைகளும் நீடிக்கின்றன, இது மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனைப் பாதிக்கிறது.


பாதிக்கப்படக்கூடிய மக்களில் ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச்சத்து ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள நடவடிக்கையாக உணவு செறிவூட்டல் உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியச் சூழலில் அரிசி நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குவதற்கான ஒரு சிறந்த வழியாக இது திகழ்கிறது. ஏனெனில் இந்திய மக்கள் தொகையில் 65% பேர் அரிசியை பிரதான உணவாக உட்கொள்கிறார்கள்.