நாட்டின் சிறந்த 500 மதிப்புமிக்க நிறுவனங்களை தேர்வு செய்து அதை பட்டியலிட்டு வருகிறது ஆக்சிஸ் வங்கி. அந்த வகையில், 2022ஆம் ஆண்டுக்கான பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 பட்டியலை ஆக்சிஸ் வங்கி வெளியிட்டுள்ளது.


மதிப்பு மிக்க நிறுவனங்கள்:


பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு 226 லட்சம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 300 நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. அதில், 18 நிறுவனங்களின் மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. உலகின் பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான ஆறு நிறுவனங்களின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் வரை ஏற்றம் கண்டுள்ளது.


இதுகுறித்து ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமிதாப் சௌத்ரி கூறுகையில், "இந்த பட்டியல் இதை விட சரியான நேரத்தில் வந்திருக்க முடியாது. பெரும்பாலான நாடுகள் மந்தநிலையைப் எதிர் கொண்டிருக்கும் போது இந்தியா நீடித்த வளர்ச்சிக்கு தயாராக உள்ளது. 


மொத்த உள்நாட்டு உற்பத்தி:


இந்திய நிறுவனங்களும், அவர்களின் தலைமையும் நாட்டை இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு செல்வதில் பங்களித்துள்ளனர். அதற்காக, அவர்களை பாராட்ட வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதில் அவை இன்னும் பெரிய பங்கை வகிக்கும்" என்றார்.


ஹுருன் இந்தியாவின் தலைமை ஆராய்ச்சியாளரும் நிர்வாக இயக்குவருமான அனஸ் ரஹ்மான் ஜுனைத், "இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமான 2.7  டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் சந்தை மதிப்புடன், இந்த நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. 


இந்த 500 நிறுவனங்கள் இணைந்து 820 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 666.2 லட்சம் கோடி) விற்பனை செய்து 7.3 மில்லியன் மக்களைப் பணியமர்த்தியுள்ளன. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) உழைக்கும் வயதினரை விட அதிகமாகும்" என்றார்.


ரிலையன்ஸ் முதலிடம்:


17.2 டிரில்லியன் ரூபாய் சந்தை மதிப்புடன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ரூ. 11.6 டிரில்லியன் மதிப்புடனும் எச்டிஎஃப்சி வங்கி ரூ. 8.3 டிரில்லியன் மதிப்புடனும் உள்ளன. தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நான்காவது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி, ஐடிசி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலில் முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் அதானி டோட்டல் கேஸ் (ATG) மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளது. அந்த நிறுவனங்களின் மதிப்பு முறையே ரூ.3.96 டிரில்லியன் மற்றும் ரூ.3.81 டிரில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.